2014-02-27 15:33:23

எங்களுக்கு உணவு தேவையில்லை, உண்மை தேவை, மன்னார் ஆயர்


பிப்.27,2014. எங்களுக்கு உணவு தேவையில்லை, உண்மை தேவை, அதாவது எங்கள் உறவினர்களுக்கும், ஏனையத் தமிழர்களுக்கும் என்ன நடந்தது என்ற உண்மை தேவை என்று இலங்கையின் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் கூறினார்.
இலங்கையின் வடபகுதியில் திருக்கீத்தீஸ்வரர் கோவிலுக்கு அருகே புதைக்கப்பட்டிருந்த 80 பேருக்கும் அதிகமானவர்களின் எலும்புக்கூடுகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.
அடையாளம் தெரியாமல் இறந்துபோன இவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுத்த ஆயர் ஜோசப், அங்குப் புதைக்கப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே என்ன ஆயிற்று என்பதைத் தெரிவிக்க அரசு கடமைப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார்.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப்போரில் இறந்தோர் மற்றும் காணாமற்போனோர் அனைவரையும் குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் தார்மீகக் கடமை அரசுக்கு உள்ளதென்றும் மன்னார் ஆயர் ஜோசப் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.