திருஅவையின் எண்ணத்திலும், உள்ளத்திலும் குடும்பங்கள் மையமாகியுள்ளன
- பேராயர் Vincenzo Paglia
பிப்.26,2014. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, திருஅவையின் எண்ணத்திலும், உள்ளத்திலும்
குடும்பங்கள் மையமாகியுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 'அன்புள்ள
குடும்பத்திற்கு' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள மடலை, பிப்ரவரி 25,
இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட, திருப்பீட குடும்பப்பணி அவையின் தலைவர்
பேராயர் Vincenzo Paglia அவர்கள், இவ்வாறு கூறினார். குடும்பங்களை மையக்கருத்தாகக்
கொண்டு, இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திலும்,
வருகிற ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்பியாவில் நடைபெறவிருக்கும் உலகக் குடும்ப
மாநாட்டிலும் குடும்பங்கள் பொருளுள்ள வகையில் கலந்துகொள்ள, திருத்தந்தையின் இம்மடல் தூண்டுகிறது
என்று பேராயர் Paglia அவர்கள் குறிப்பிட்டார். நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக,
புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
அகில உலகக் குடும்ப விழாவையும், திருமணத்திற்கு நிச்சயம் செய்திருந்த 30,000க்கும் அதிகமான
தம்பதியருடன், இம்மாதம் 14ம் தேதி, திருத்தந்தை மேற்கொண்ட சந்திப்பையும் சிறப்பாகக் குறிப்பிட்டுப்
பேசிய பேராயர் Paglia அவர்கள், குடும்பங்கள் திருஅவையின் பயணத்தில் முக்கியமான உடன் பயணிகள்
என்பதைக் கூறினார்.