உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் திருத்தந்தை கடிதம்
பிப்.25,2014. வருகிற அக்டோபரில் குடும்பம் குறித்து நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் சிறப்பு
மாமன்றத்துக்கு, உலகின் குடும்பங்கள் தங்கள் நடைமுறைப் பரிந்துரைகள் மற்றும் செபத்தின்
மூலம் ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். நற்செய்தி அறிவிப்புச்
சூழலில் குடும்பத்துக்கான மேய்ப்புப்பணி சவால்கள் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்தச்
சிறப்பு மாமன்றத்தை முன்னிட்டு உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் இச்செவ்வாயன்று கடிதம்
எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அர்ப்பணிக்கப்பட்ட துறவியர்,
பொதுநிலையினர் என அனைத்து இறைமக்களையும் இம்மாமன்றம் ஈடுபடுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். வருகிற
அக்டோபர் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் இடம்பெறவிருக்கும்
உலக ஆயர்கள் மாமன்றமும், குடும்பம் என்ற தலைப்பிலே நடைபெறும் எனவும் திருத்தந்தையின்
கடிதம் கூறுகிறது. 2015ம் ஆண்டு செப்டம்பரில் பிலடெல்ஃபியாவில் உலக குடும்பங்கள்
மாநாடும் நடைபெறும் எனக் கூறியுள்ள திருத்தந்தை, குடும்பங்களின் செபம் உலக ஆயர்கள் மாமன்றத்துக்கு
விலைமதிப்பில்லாத சொத்தாக இருக்கும் எனவும், குடும்பங்கள் தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார்.