திருத்தந்தை : இயேசு நம்மைத் தெருவில் தனியாக விட்டுச் செல்வதில்லை
பிப்.24,2014. இயேசு நம்மைத் தெருவில் தனியாக விட்டுச் செல்லவில்லை, நமக்கென திருஅவை
எனும் வீட்டைக் கொடுத்துள்ளார் என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை
பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி
மறையுரையாற்றிய திருத்தந்தை, இந்நாள் திருப்பலி வாசகமான, பேய்பிடித்த சிறுவனைக் குணப்படுத்தல்
நிகழ்ச்சி குறித்து தன் கருத்துக்களை வழங்கினார். அச்சிறுவனின் தந்தை விடுத்த விசுவாச
விண்ணப்பத்தால் தூண்டப்பட்டு, சிறுவனைக் குணப்படுத்திய இயேசு, அச்சிறுவனை, தெருவில் விட்டுவிட்டு
சென்றுவிடவில்லை, மாறாக, குனிந்து, தொட்டுத்தூக்கி தந்தையிடம் ஒப்படைத்தார் என்ற திருத்தந்தை,
இயேசு, ஒரு மந்திர தந்திரத்தில் ஈடுபடுபவராக காட்டப்படவில்லை, மாறாக நம்மை நம் சொந்த
வீட்டுக்கு அழைத்து வருபவராக, அதாவது திருஅவைக்குள் மீண்டும் கொண்டுவருபவராகவே அவரின்
செயல்பாடுகள் உள்ளன என்றார். இதற்கு உதாரணமாக, இலாசரை உயிர்ப்பித்தல், யாயீரின் மகளையும்,
விதவையின் மகனையும் உயிர்ப்பித்தல், காணாமல்போன ஆடு என்பனவற்றை எடுத்துக்காட்டுகளாகச்
சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ். எல்லா குணப்படுத்தல்களும், மன்னிப்புகளும்
நம் மக்களிடமே அதாவது திருஅவையிடமே நம்மை திரும்பக் கொண்டுவருபவை என்பதை இயேசுவின் செயல்பாடுகள்
காட்டுகின்றன என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.