பிப்.24,2014. இலங்கையில் நிலவும் வறட்சியினால் இம்முறை நெல் விளைச்சலில் 35 விழுக்காடு
வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் மூலம் தெரியவருகின்றது. தேசிய நெல் உற்பத்தியில்
ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி காரணமாக அரிசி விலையும் அதிகரிக்கக்கூடும் என்று வேளாண் அமைச்சகம்
கூறியுள்ளது. அதிக நெல் விளைச்சலை தரும் மாவட்டங்களான அம்பாறை, அனுராதபுரம், குருநாகல்
ஆகிய மாவட்டங்களிலும், தற்போது நிலவும் வறட்சி நிலை காரணமாக, எதிர்பார்த்த விளைச்சல்
கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீரை முழுமையாக நம்பியிருக்கும்
மேட்டுநில வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்ட விவசாயிகளுக்கே வறட்சியினால் இழப்புகள் அதிகம்
என்று உள்ளுர் விவசாய அமைப்பொன்றின் தலைவரான எம்.ஐ.எம் அபுபக்கர் தெரிவித்தார்.