2014-02-22 15:01:13

புனிதரும் மனிதரே நன்றியறிதலின் மறு பெயர் - புனித Eucherius


பிரெஞ்ச் நாட்டில் செல்வம் நிறைந்த ஒரு குடும்பத்தில், 687ம் ஆண்டு பிறந்தவர் Eucherius. Eucherius என்றால், நன்றியறிதல் என்பது பொருள். இவர் பிறந்ததும் இவரது பெற்றோர் இவரைக் இறைவனுக்குச் சிறப்பு காணிக்கையாக்கினர். தனது 27வது வயதில் துறவு நிலை பூண்ட Eucherius, கடுந்தவங்கள் மேற்கொண்டார். 34வது வயதில் இவர் ஆயராக நியமனம் பெற்றபோது, தன்னை அப்பதவியிலிருந்து காத்து, துறவு மடத்திலேயே தங்கவைக்கவேண்டும் என்று தன் சகோதரத் துறவிகளிடம் வேண்டினார். ஆனால், அவர்களோ, பொதுநலனை மனதில் கொண்டு, ஆயராக பொறுப்பேற்க Eucherius அவர்களை அனுப்பி வைத்தனர்.
அவரை ஆயராக நியமித்த அரசன் Charles Martel என்பவர், கோவில் சொத்துக்களை அபகரித்து, தன் சொந்த செலவுகளுக்கும், போர்ச் செலவுகளுக்கும் பயன்படுத்தியதை, ஆயர் Eucherius வன்மையாகக் கண்டித்தார். எனவே அரசர் அவரை Cologne என்ற நகருக்கு அனுப்பிவைத்தார். அந்நகர மக்கள், ஆயர் Eucherius அவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர் என்பதை அறிந்த அரசன், ஆயரை, யாருக்கும் தெரியாமல், Liege என்ற பகுதிக்கு விரட்டினார். அப்பகுதியின் ஆளுநராய் இருந்த ராபர்ட் என்பவர், ஆயர் Eucherius அவர்களை, தன் தர்மப்பணிகள் அனைத்தையும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்பணிகள் வழியே, ஆயர் Eucherius அவர்கள், பல்லாயிரம் ஏழைகளுக்கு உதவினார். அதே நேரம், ஒரு துறவு மடத்தில் சேர்ந்து கடுந்தவங்களிலும், செபங்களிலும் வாழ்வைக் கழித்தார். 743ம் ஆண்டு பிப்ரவரி 20ம் நாள் தனது 56வது வயதில், புனித Eucherius இறைவனடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.