2014-02-21 15:53:28

திருத்தந்தை பிரான்சிஸ் : உறுதிபூசுதல் அருளடையாளம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானது


பிப்.21,2014. உறுதிபூசுதல் அருளடையாளம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானது. அது, நம் விசுவாசத்தைப் பாதுகாத்து, துணிச்சலுடன் நற்செய்தியைப் பரப்புவதற்கு நம்மை உறுதிப்படுத்துகின்றது என்று, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் முற்பகல் 11 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் திருவழிபாட்டில் 19 புதிய கர்தினால்களுக்குச் சிவப்புத் தொப்பி, மோதிரம் ஆகியவற்றை வழங்குவதோடு, புதிய கர்தினால்களுக்குரிய ஆலயத்தையும் அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கர்தினால்களுடன் இணைந்து இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலியும் நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
19 புதிய கர்தினால்களுள் இருவர் ஆசியர்கள். தென் கொரியாவின் செயோல் பேராயர் Andrew Yeom Soo jung அவர்களும், பிலிப்பின்சின் Cotabato பேராயர் Orlando Quevedo அவர்களும் இவ்விருவர் ஆவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.