2014-02-20 16:02:11

திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் 8 கர்தினால்களின் கூட்டம், வருகிற ஏப்ரல் மாதம் மீண்டும் கூடும்


பிப்.20,2014. திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் 8 கர்தினால்களின் கூட்டம் வருகிற ஏப்ரல் மாதம், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான்பால் அவர்களின் புனிதர் நிலைத் திருச்சடங்குகளுக்குப் பின்னர், 28ம் தேதி முதல் 30ம் தேதி முடிய மீண்டும் கூடும் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
இத்திங்கள் முதல் புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் 8 கர்தினால்கள் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டங்களில், வத்திக்கான் வங்கி என்று பரவலாகக் அழைக்கப்படும் சமயப்பணி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆழ்ந்த ஆய்வு ஒன்று நடைபெற்றது என்று கூறிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், இந்த ஆய்வுகளின் கருத்துக்கள் திருத்தந்தையின் கவனத்திற்கென சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
குறிப்பாக, செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள், சமயப்பணி நிறுவனத்தின் உறுப்பினர்களையும் இணைத்து 15 பேர் கொண்ட குழு, திருத்தந்தையுடன் தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டது என்றும் அருள் பணியாளர் Lombardi அவர்கள் தெளிவுபடுத்தினார்.
கர்தினால்களின் ஆலோசனைக் கூட்டம் இனியும் தொடரும் என்று கூறிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், வருகிற ஏப்ரல் 28 முதல் 30ம் தேதி, மற்றும் ஜூலை 1 முதல் 4ம் தேதி ஆகிய நாட்களில் அடுத்த இரு கூட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.