2014-02-19 15:16:55

முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான்பால் உருவங்கள் பதிக்கப்பட்ட தபால் வில்லைகள்


பிப்.19,2014. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் ஏப்ரல் 27, ஞாயிறன்று புனிதர்களாக உயர்த்தப்படவிருக்கும் தருணத்தையோட்டி, அவர்கள் உருவங்கள் பதிக்கப்பட்ட தபால் வில்லைகள் வருகிற மார்ச் 21ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை 1962ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கி, திருஅவையில் புத்துணர்வைக் கொணர்ந்த திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், "நல்ல திருத்தந்தை ஜான்" என்று மக்களால் புகழப்பட்டு, 1963ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
கத்தோலிக்கத் திருஅவையை மூன்றாவது மில்லென்னியத்திற்குள் அழைத்து வந்த திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், வேறு எந்தத் திருத்தந்தையும் மேற்கொள்ளாத அளவு திருப்பயணங்களை உலகெங்கும் மேற்கொண்டு, மக்களை, குறிப்பாக, இளையோரை பெருமளவில் கவர்ந்தவர்.
15 இலட்சம் என்ற எண்ணிக்கையில் அச்சிடப்படும் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் தபால் தலைகள், வத்திக்கானிலும், போலந்து நாட்டிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.