2014-02-15 14:07:44

பொதுக்காலம் 6ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 மலைமீது இயேசு தந்த மறையுரையின் மற்றொரு பகுதியை இரண்டாவது வாரமாக, தொடர்ந்து நாம் சிந்திக்க வந்திருக்கிறோம். சென்ற வாரம், இயேசு கூறிய உப்பும், விளக்கும் என்ற இரு உருவகங்களைச் சிந்தித்தோம். இந்த வாரம், நீரும், நெருப்பும் என்ற வேறு இரு உருவகங்களுடன் நமது சிந்தனைகளை ஆரம்பிப்போம். இன்றைய முதல் வாசகம் இவ்வுருவகங்களை நமக்குத் தருகிறது. சீராக்கின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இவ்வாசகம் மிக எளிய வார்த்தைகளில், அழகான, ஆழமான வாழ்க்கைப் பாடங்களை நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாசகத்தின் முதல் பகுதியைக் கேட்போம்.
சீராக்கின் ஞானம் 15: 15-17
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.

நீரா, நெருப்பா? வாழ்வா, சாவா? என்ற கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான விடைகளை எளிதில் சொல்லிவிடலாம். நெருப்புக்குப்பதில், கைநீட்டி, நீரை எடுப்பதே மேல் என்றும், சாவுக்குப் பதில், வாழ்வை விரும்புவதே மேல் என்றும் நம் அறிவு எளிதில் சொல்லிவிடும். ஆனால், வாழ்வில் நம்மை அறிவு மட்டுமா வழிநடத்துகிறது? உறவுகள், உணர்வுகள், ஊறிப்போன பழக்கங்கள் என்று வேறு பல கட்டாயங்களும் நம்மைத் தவறான வழியில் நடத்துகின்றனவே! சுடும் என்று தெரிந்தும், புண்படுவோம் என்று தெரிந்தும், நெருப்பைத் தேடிச்சென்று தொட்ட நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.

நம் கண்முன் நடனமாடும் நெருப்பு பார்க்க அழகாக இருக்கும். அந்த அழகைத் தேடி குழந்தை ஒன்று தவழ்ந்து செல்லும்போது, அதைத் தடுக்கிறோம். குழந்தை எவ்வளவுதான் அடம்பிடித்து அழுதாலும், நெருப்பின் அருகே குழந்தை செல்வதை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால், எத்தனை முறை நாம் நெருப்புடன் விளையாடி, புண்பட்டிருக்கிறோம்? நம் வாழ்வின் எத்தனைப் பகுதிகள் நெருப்பில் சாம்பலாகியுள்ளன?
இறைவனின் படைப்பில், நீர், நெருப்பு இரண்டும் நல்லவையே. ஆனால், அவற்றை நாம் பயன்படுத்துவதைப் பொருத்து, நன்மை விளையலாம்; தீமையும் விளையலாம். நீரையும், நெருப்பையும் அளவுடன் பயன்படுத்தும் வழிகளை அனைவரும் கற்றுக்கொண்டால், அவை, அனைவருக்கும் பயன்படும் கருவிகளாக மாறும். அளவுகளை, கட்டுப்பாடுகளை நாம் மீறும்போது, அவை அழிவுக்கருவிகளாக மாறும்.
அளவற்ற, தேவையற்ற வகையில் நீரை வீணாக்கும் முதல் உலக நாடுகளின் மக்களை இந்நேரத்தில் எண்ணிப் பார்ப்போம். மூன்றாம் உலகப் போரென்று ஒன்று நிகழ்ந்தால், அது தண்ணீருக்காகத்தான் நிகழும் என அஞ்சும் அளவுக்கு, நீரின் பற்றாக்குறை பெருகிவரும் இன்றையச் சூழலில், முதல் உலக நாட்டு மக்களும், இரண்டாம், மூன்றாம் உலகில் வாழும் செல்வந்தர்களும் விழிப்படைந்து, மிகுந்த கவனத்துடன் நீரைப் பயன்படுத்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று இறைவனிடம் மன்றாடுவோம். அதேபோல், பலவழிகளில் நெருப்போடு விளையாடுவோரை, குறிப்பாக இளையோரை, இந்நேரத்தில் நினைத்து, அவர்கள் தங்கள் விபரீதப் போக்குகளை விட்டு, நல்வழி வந்து சேர வேண்டுவோம்.

சீராக்கின் ஞானம் தரும் மற்றொரு கேள்வி - வாழ்வா, சாவா... எதை விரும்புவது? அறிவுப்பூர்வமாய்ச் சிந்தித்தால், இதுவும் மிக எளிதான கேள்விதான். சாவை எப்படி விரும்பமுடியும்? வாழ்வைத்தான் விரும்பமுடியும், விரும்பவேண்டும் என்று எளிதில் பதில் சொல்லிவிடலாம். சீராக் கூறும் வாழ்வு, சாவு இவை குறித்து Walter Burghardt என்ற இயேசுசபை அருள்பணியாளர் கூறும் விளக்கம், இக்கேள்வியை மற்றொரு கோணத்தில், இன்னும் சிறிது ஆழமாய் சிந்திக்க உதவும்.

சீராக் கூறும் வாழ்வு, மூச்சு விடுதல், இதயம் துடித்தல் போன்ற உடல் செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட வாழ்வு அல்ல. இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரை, சீராக்கைப் பொருத்தவரை, இறைவன் மீது பற்றுகொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. அதேபோல், சீராக் கூறும் சாவு, நமது மூச்சு நின்று போகும்போது நிகழும் சாவு அல்ல. மூச்சு இருக்கும்போதே, மனிதர்கள் சாகமுடியும். இறைவாக்கினர்களைப் பொருத்தவரை, இறைவனின் வழியில் நடக்காத மனிதர்கள் மூச்சுவிடும் நடைப்பிணங்களே. எனவே, மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன என்று சீராக் கூறும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை நம்முன் அவர் வைக்கிறார் என்று விளக்குகிறார் அருள்பணியாளர் Walter Burghardt.

இறைவனின் வழி வாழ்வதை, இஸ்ரயேல் மக்களில் பலர், மோசே தந்த இறைச் சட்டங்களின்படி வாழ்ந்தால் போதும் என்ற அளவில் நினைத்துப் பார்த்தனர். மோசேயின் சட்டங்களை, தங்கள் வசதிக்கேற்ப வளைத்து, அவ்வழியில் மக்களையும் தவறாக வழிநடத்தி வந்தனர், மதத்தலைவர்கள். எனவே, குருட்டுத்தனமாய் சட்டங்களைப் பின்பற்றும் மதத்தலைவர்கள் காட்டும் வாழ்வு, வெறும் மூச்சுவிடும் நடைப்பிணங்களின் வாழ்வு என்பதை இயேசு மறைமுகமாக இன்றைய நற்செய்தியில் குறிப்பிடுகிறார்: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். (மத். 5: 20) என்ற எச்சரிக்கையை மக்கள் முன் வைக்கிறார்.
அதுமட்டுமல்ல, "முன்னோர் கூறிய சட்டங்களைக் கேட்டிருக்கிறீர்கள்.... ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்." என்று இன்றைய நற்செய்தியில் பலமுறை கூறி, சட்டத்தையும் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார் இயேசு. சட்டங்களை வெறும் சடங்காக, சம்பிரதாயமாக, ஏனோதானோவென்று பின்பற்றாமல், அச்சட்டங்களின் பின்புலத்தில் வாழும் அதன் ஆத்மாவை, அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அதைப் பின்பற்றவேண்டும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.

மோசே கூறிய சட்டங்களை இயேசு இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறார். என்பதை, ஒரே ஓர் எடுத்துக்காட்டின் மூலம் நாம் புரிந்துகொள்ள முயல்வோம். காணிக்கை பற்றி மோசே தந்த சட்டங்களை இயேசு எவ்விதம் எண்ணிப்பார்க்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.
கோவிலுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும் ஆட்டுக்குட்டிகள், புறாக்கள், காய்கறிகள், பழவகைகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பவை, மோசே தந்த காணிக்கைச்சட்டங்களாய் இருந்தன. இயேசு ஒருபடி மேலே செல்கிறார். வெளிப்புறத்தில் உங்கள் கைகளில் ஏந்திவரும் காணிக்கைகள் ஒரு புறம் இருக்கட்டும்; காணிக்கை செலுத்தவரும் உங்கள் உள்புறம் எவ்விதம் உள்ளது என்ற கேள்வியை இயேசு எழுப்புகிறார்.
மத்தேயு நற்செய்தி 5: 23-24
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

நம் மனதில் அழகானதொரு காட்சியைத் தீட்டுகிறார் இயேசு. காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு மனதில் நெருடல் எழுகிறது. தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல். சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? இயேசு கூறும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உன் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர் தரும் சவால் இன்னும் உயர்ந்ததாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... நம் சகோதரர் சகோதரிகள் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதை உணர்ந்த உடனேயே, நமது காணிக்கைச் சடங்குகளை நிறுத்திவிட்டு, முதலில் அவர்களுடன் நல்லுறவை உருவாக்க நாம் செல்லவேண்டும். காணிக்கைகள் காத்திருக்கலாம் என்று இயேசு சொல்கிறார்.
சரி... பிறர் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதற்கு பதில், நாம் அவர்கள்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதாக உணர்ந்தால்... என்ன செய்வது? இக்கேள்விக்கு, இயேசுவின் பதில் ஒருவேளை இவ்விதம் இருந்திருக்கும். நீ உன் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால், காணிக்கை செலுத்துவதைப் பற்றியே சிந்திக்கவேண்டாம். முதலில் உன் உறவைச் சீராக்குவதுபற்றி சிந்தித்து, செயல்படு. பின்னர் உனது காணிக்கையைப்பற்றி சிந்திக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லியிருப்பார் இயேசு.

காணிக்கைச் சட்டங்களைப் போலவே, இன்றைய நற்செய்தி முழுவதும் இயேசு சுட்டிக்காட்டும் மோசேயின், பல சட்டங்களும் வெளிப்புறத்தைச் சார்ந்தவை. "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்," என்று இயேசு விடுக்கும் சவால்கள், நமது உள்புறத்தைச் சார்ந்தவை. வெளிப்படையான மாற்றத்திற்கு அல்ல, உண்மையான மனமாற்றத்திற்கு நம்மை அழைப்பவை.
தொடர்ந்து இரு வாரங்களாய் இயேசு தன் மலைப்பொழிவின் மூலம் சவால்களை நம்முன் வைக்கிறார். இப்படியும் வாழமுடியுமா என்ற கேள்வியை, பிரமிப்பை எழுப்பும் சவால்கள் இவை. இப்படி வாழ்ந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்ற ஏக்கத்தை, கனவைத் தூண்டும் சவால்கள் இவை. இந்தச் சவால்களைச் சந்திக்கும் முயற்சியில் நாம் ஈடுபடும்போது, நம் மனதில் எழும் கேள்விகள், பிரமிப்புகள், ஏக்கங்கள், கனவுகள் அனைத்தும், நம்மைப் புனிதத்தின் சிகரம் நோக்கி அழைத்துச் செல்லும் படிக்கற்கள். அச்சிகரத்தை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் முதல் படியில் நாம் இன்று காலடி எடுத்துவைப்போம்.








All the contents on this site are copyrighted ©.