பிப்.15,2014. கடலுக்கடியில், உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை அமைக்க, சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவில், மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக, போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
தரைவழி, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துகளையும் தாண்டி, வர்த்தகப் பயன்பாட்டிற்காக,
நீருக்கு அடியிலும் போக்குவரத்தை விரிவுபடுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்
ஒருபகுதியாக, போகாய் கடலில், உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை அமைக்கப் போவதாக, சீனா
தெரிவித்துள்ளது. லியோனிங் பகுதியிலிருந்து, ஷான்டாங் வரையிலான, 123 கி.மீ. தூரத்திற்கு,
கடலுக்கு அடியில் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை, சரக்கு இரயில் போக்குவரத்திற்காகப்
பயன்படுத்தப்பட உள்ளது. கடலுக்கு அடியில், மணிக்கு, 220 கி.மீ., வேகத்தில் சரக்கு இரயில்கள்
இயக்கப்பட உள்ளன. 2020ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.