2,50,000 ஊட்டச்சத்துப் பற்றாக்குறைச் சிறாருக்கு உதவுவதற்கு நிதி சேகரிக்குமாறு மனிலா
கர்தினால் வேண்டுகோள்
பிப்.14,2014. திருநீற்றுப் புதனன்று நன்கொடைகள் கொடுப்பதற்காக, குறிப்பாக, ஹையான் சூறாவளிப்
புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இப்போதிருந்தே மக்கள் பணத்தைச் சேர்த்து
வைக்குமாறு கேட்டுள்ளார் பிலிப்பின்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே. பிலிப்பின்சில்
ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்தது 2 இலட்சத்து 50 ஆயிரம் சிறாருக்கு
உதவுவதற்கென அந்நாட்டுக் கர்தினால் Gaudencio Rosales அவர்கள் திட்டமிட்டுள்ள நடவடிக்கையைத்
தொடங்கி வைத்து உரையாற்றிய மனிலா கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பின்ஸ் மக்களின் சேமிப்புப்
பண்பை ஊக்குவித்துள்ளார். கத்தோலிக்கர் உண்ணாநோன்பு அனுசரிக்கும் திருநீற்றுப் புதனன்று
ஏழைச் சிறாருக்கு உணவு வாங்குவதற்கு உதவியாக, பிலிப்பின்ஸ் மக்கள் பணம் சேமிக்கத் தொடங்குமாறு
கேட்டுள்ளார் கர்தினால் தாக்லே. Pondo ng Pinoy என்ற பிறரன்பு அமைப்பின் மூலம் வறுமையில்
வாடும் சிறாருக்கு உதவுவதற்கு முயற்சித்து வருகிறார் கர்தினால் Gaudencio Rosales. இவ்வமைப்பு
2004ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.