"ஆடுகளின் இயற்கை
மணத்தைத் தாங்கி, அவை மத்தியிலேயே தங்கும் மேய்ப்பர்களாக அருள் பணியாளர்கள்
வாழ வேண்டும்." சென்ற ஆண்டு மார்ச் மாதம், புனித வியாழன் காலையில் இந்த வார்த்தைகள்
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் ஒலித்தன. அன்று காலை, புனித எண்ணெய்
அர்ச்சிக்கும் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள் பணியாளர்களுக்கென
வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார். "நாம் மேலோட்டமாக நம்மீது தெளித்துக்கொள்ளும்
நறுமண 'spray'போல இறைவனைக் கருதுகிறோமா? அல்லது,
அவர் நம் வாழ்வில் இணைந்த ஓர் உறவாக விளங்குகிறாரா?" என்ற கேள்வியை,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித மார்த்தா இல்லத்தில், ஏப்ரல் மாதம் ஆற்றிய ஒரு
திருப்பலியில் எழுப்பினார். உரோம் நகரில் செயலாற்றும் Civiltà Cattolica என்ற மையத்தின்
இயக்குனரான இயேசு சபை அருள் பணியாளர் Antonio Spadaro அவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்
திருத்தந்தையுடன் மேற்கொண்ட ஒரு நேர்காணலில், "எவ்வகையான திருஅவையை நீங்கள் கனவு காண்கிறீர்கள்?"
என்று கேட்டார். அதற்குத் திருத்தந்தை அவர்கள், "போர்க்களத்தில் செயலாற்றும்
ஒரு மருத்துவமனையைப் போல, திருஅவையை நான் காண்கிறேன்" என்று பதில்
அளித்தார். இந்த நேர்காணலின் பதிவுகள் செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்டு, உலகெங்கும்
பெருமளவு வரவேற்பை பெற்றன. அதே செப்டம்பர் 19ம் தேதியன்று, புதிதாகப் பொறுப்பேற்ற
ஆயர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் சந்தித்தபோது, "உங்கள்
பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுடன் அதிக நேரம் தங்குங்கள். விமான நிலையத்து ஆயர்களாக
மாறி, மக்களுக்கு அதிர்ச்சியூட்டாதீர்கள்" என்று அறிவுரை வழங்கினார்.
"ஆடுகளின்
மணம்", "கடவுள் Spray", "போர்க்கள மருத்துவமனை", "விமான நிலைய ஆயர்கள்" என்ற உருவகங்கள்
கடந்த சில மாதங்களாக உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த உருவகங்கள். உருவகங்களில் பேசுவது
ஒரு தனி கலை. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்கலையில் தேர்ந்தவராகத் தோன்றுகிறார்.
இவ்வுருவகங்களுடன் சேர்ந்து, அவர் கூறிய பல உண்மைகள் மனதில் ஆழப் பதிந்துள்ளன. உருவகங்கள்,
உவமைகள் வழியே இயேசு கூறிய பல உண்மைகள், இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னும், நமக்குள்
தாக்கங்களை உருவாக்கி வருகின்றன. இயேசு பயன்படுத்திய உருவகங்கள் தினசரி வாழ்விலிருந்து
எடுக்கப்பட்டவை. எவ்வித அடுக்குமொழியோ, அலங்காரமோ இல்லாமல், அவர் உருவகங்களின் உதவியுடன்
சொன்ன உண்மைகள், மக்கள் மனங்களில் ஆழமாய், பாடங்களாய் பதிந்தன. இயேசுவின் படிப்பினைகள்
பலவற்றைத் தொகுத்து, மத்தேயு தனது நற்செய்தியில் 5,6,7 ஆகிய மூன்று பிரிவுகளில் மலைப்பொழிவாகத்
தந்துள்ளார். அடுத்த மாதம் நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்கு ஏற்ற ஒரு தயாரிப்பாக,
இந்த ஞாயிறன்றும், இனி தொடரும் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மலைப்பொழிவின் வெவ்வேறு
பகுதிகளைக் கேட்கவிருக்கிறோம்.
இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியில்
இயேசு இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்...
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்று இயேசு தன்னைச் சூழ்ந்திருந்த
மக்களிடம் கூறியுள்ளார். உப்பும் விளக்கும் இல்லாத வீடுகள் இல்லை. ஏழை பணக்காரன், அரசன்
ஆண்டி என்ற பாகுபாடுகள் ஏதும் இன்றி, எல்லா வீடுகளிலும் பயன்படுவது உப்பும், விளக்கும்.
இயேசு கூறிய இவ்விரு உருவகங்களையும் ஆழமாய் அலசுவது பயனளிக்கும்.
நீங்கள்
மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்ற இந்தக் கூற்றின் ஆழத்தை உணர, உப்பாக இருப்பது
என்றால் என்ன? உலகிற்கு உப்பாக இருப்பது என்றால் என்ன? என்ற இரு கேள்விகளை எழுப்பலாம்.
உப்பாக இருப்பது என்றால், நடுநாயகமாக இல்லாமல், ஒரு பகுதியாக இருப்பது. உப்பு
இல்லையேல், உணவுக்குச் சுவையே இல்லை. ஆனால், உப்பே உணவாக முடியாது. அப்படி யாராவது உப்பை
உணவாகக் கொண்டால், அவர் தாகத்தால் தவிக்க வேண்டியிருக்கும். உணவுக்குச் சுவை சேர்க்கும்
உப்பு, ஓரு குறிப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தானே மிகவும் முக்கியம்
என்று எண்ணி, உப்பு தன் அளவைக் கடந்து உணவுடன் சேர்ந்தால், அந்த உணவு குப்பைக்குத்தான்
போக வேண்டும். உப்பில்லா உணவும், உப்பு அதிகமான உணவும் குப்பையிலே. உணவு கெட்டுப்போகாமல்
இருப்பதற்கும், உடலின் ஒரு சில குறைகளைத் தீர்ப்பதற்கும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
உப்பின் அரிய குணங்களை நன்கு அறிந்திருந்த இயேசு, தன்னைப் பின்பற்றுவோருக்கு
அக்குணங்களை ஒப்புமைப்படுத்துகிறார். இயேசுவைப் பின்பற்றுவோர் உலகின் உப்பாக இருக்கின்றனர்
என்றால், அதன் பொருள் என்ன?
அவர்கள் உலகின் ஒரு பகுதியாய், ஒரு முக்கியப்
பகுதியாய் கலந்து, கரைந்து வாழ்கிறார்கள். தாங்களே உலகின் மையம், நடுநாயகம் என்று வாழ்வதில்லை. உணவில்
அளவோடு கரையும் உப்பைப்போல், அவர்களும் உலகில் அளவோடு கரைந்து வாழ்கின்றனர். அளவுக்கதிகமாய்
உலகோடு கரைந்தால், உலகம் அவர்களால் பயன்பெறப் போவதில்லை. உலகிற்கு மருந்தாகவும், உலகை
அழிவிலிருந்து காக்கவும் இவர்கள் கருவிகளாக இருக்கின்றனர்.
நீங்கள்
மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று சொன்ன அதே மூச்சில், இயேசு ஓர் எச்சரிக்கையையும்
தருகிறார். உணவுக்குச் சுவைசேர்க்கும் உப்பே சுவையிழந்து போனால் பயனில்லை என்று இயேசு
எச்சரிக்கிறார். உப்பு எவ்விதம் தன் சுவையை இழக்கும்? உப்புடன் பிற மாசுப் பொருட்கள்
கலந்தால், சூரிய வெப்பத்தால் உப்பு அதிகம் தாக்கப்பட்டால், அது, தன் சுவையை இழந்துவிடும்.
உப்பை நீரில் கரைத்து, அதனுள் மின்சக்தியைச் செலுத்தினால் மாற்றங்கள் உருவாகும். இயேசுவைப்
பின்பற்றுவோரும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகி, தளர்ந்து,
உலகச் சக்திகளால் ஈர்க்கப்பட்டால், தாக்கப்பட்டால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயனற்ற
உப்பாக மாற வாய்ப்புண்டு. சுவையிழந்த, பயனற்ற உப்பு வெளியில் கொட்டப்படும், மனிதரால்
மிதிபடும். மிதிபடும் உப்பைப்பற்றிச் சிந்திக்கும்போது, என் மனதில் வேறொரு எண்ணமும்
எழுகிறது. உணவுக்கு உயிரோட்டமாய் இருக்கும் உப்பு, தன்னை முற்றிலும் மறைத்து, கரைத்து
உணவுக்குச் சுவை சேர்க்கிறது. அதேபோல், உலகில் எத்தனையோ மக்கள் இந்த உலகின் உயிர் நாடிகளாய்
இருக்கின்றனர். இவர்கள் இல்லையேல் உலகம் இயங்காது என்பது உண்மை. ஆனால், இவர்கள் ஒருபோதும்
உலகின் நடுநாயகமாய் வைக்கப்படுவதில்லை. உலகெங்கும் துப்புரவுத் தொழிலில் ஈடுப்பட்டுள்ள
பலகோடி மக்களை இந்நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். யாருடைய கவனத்தையும், எந்த
ஒரு விளம்பரத்தையும் தேடாமல் ஒவ்வொரு நாளும் பணி செய்யும் இவர்கள் ஒரு நாள் மட்டும் தங்கள்
பணிகளை நிறுத்திவிட்டால், உலகின் நிலை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே!
உலகின் உப்பாக இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஏர் பிடித்து உழும் விவசாயிகள், என்று
பல கோடி தொழிலாளர்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். மண்ணில் மிதிபடும் உப்பைப்போல்
வாழ்நாளெல்லாம் மிதிபடும் இவர்களுக்கு உரிய மரியாதை, மதிப்பு இவற்றை வழங்கும் மனம் நமக்கு
வேண்டும்; உலகமும் இவர்களுக்கு உரிய மதிப்பை வழங்கவேண்டும் என்று செபிப்போம்.
"நீங்கள்
உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்பது இயேசுவின் அடுத்த உருவகம். ‘ஒளி’ என்ற சொல்லைக்
கேட்டதும், ‘இருள்’ என்ற சொல் தானாகவே நம் எண்ணத்தில் தோன்றும். இருள் சூழும்போதுதானே
ஒளியைப்பற்றி, விளக்கைப்பற்றி நாம் எண்ணிப்பார்ப்போம். நடுப்பகலில் விளக்கைப்பற்றி நாம்
சிந்திப்பது இல்லை. இரவில் ஏற்றப்படும் விளக்கு, உணவில் கலக்கப்படும் உப்பைப்போல,
தன்னையே விளம்பரப்படுத்துவதில்லை. தன்னையே வெளிச்சமிட்டு காட்டுவது அல்ல, மாறாக, சுற்றியுள்ளவற்றை
வெளிச்சத்திற்கு கொணர்வதே விளக்கின் முக்கியப் பணி. மெழுகுதிரியோ, அகல்விளக்கோ, மின்விளக்கோ,
எவ்வடிவத்தில் விளக்கு இருந்தாலும், அது தன்னையே அழித்துக் கொள்ளும்போதுதான் வெளிச்சம்
தர முடியும். தன்னைக் கரைக்க மறுக்கும் உப்பு சுவை தர முடியாததுபோல், தன்னை அழிக்க, இழக்க
மறுக்கும் விளக்கு ஒளி தர முடியாது. உலகிற்கு ஒளியாக இருப்பவர்களும் தங்களையே அழித்துக்கொள்ள
முன்வரவேண்டும். தங்களையே விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச்சுற்றி இருப்பவர்களை
வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். மரக்காலுக்குள் வைக்காமல், விளக்குத் தண்டின்மீது
வைக்கப்படும் விளக்கே வீட்டை ஒளிமயமாக்கும். அதேபோல், உலகிற்கு ஒளியாக இருக்கும் நாமும்
நம் திறமைகளை உலகறியச் செய்யவேண்டும். இப்படிச் செய்வது நம் திறமைகளுக்கு நாம் தரும்
விளம்பரம் அல்ல, மாறாக, நமது திறமைகள் மூலம் பிறர் வாழ்வில் ஒளி சேர்ப்பதே நம் எண்ணம்.
இயேசுவின்
இவ்விரு கூற்றுக்களில் புதைந்துள்ள மற்றொரு நுணுக்கமான உண்மையும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்க வேண்டும் என்றோ, உப்பாக, ஒளியாக மாறுங்கள்
என்றோ இயேசு கூறவில்லை. "நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள்" என்று மலைமீது
நின்று, உலகெல்லாம் கேட்கும்படி நம்மைப்பற்றி இயேசு பெருமையுடன் பறைசாற்றியுள்ளார். நம்மீது
இயேசு கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைக்கு ஏற்ப உப்பாக, ஒளியாக வாழ்வோம்.
உலகின்
ஒளியாக நாம் எவ்வாறு வாழவேண்டும் என்பதை தினசரி வாழ்வின் எதார்த்தங்களோடு இணைத்து, இறைவாக்கினர்
எசாயா கூறும் கருத்துக்கள் இன்றைய முதல் வாசகத்தில் இவ்விதம் ஒலிக்கின்றன:
எசாயா
58: 8-10 உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான
வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று
காக்கும்... உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக்
குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,
பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை
நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்: இருண்ட
உன் நிலை நண்பகல் போல் ஆகும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Civiltà
Cattolica என்ற இதழுக்கு வழங்கிய நேர்காணலில் உலகின் உப்பாக, ஒளியாக விளங்க வேண்டிய திருஅவையைக்
குறித்து அழகான எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்: "எவ்வகையான திருஅவையை நீங்கள் கனவு காண்கிறீர்கள்?"
என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, "போர்க்களத்தில் செயல்படும் ஒரு மருத்துவமனையைப்
போல திருஅவையை நான் காண்கிறேன். அதிகமாக அடிபட்டு கிடக்கும் ஒருவரிடம், அவரது
இரத்தக் கொழுப்பு (Cholesterol), இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு
என்ன என்ற கேள்விகள் கேட்பது வீண். அவரது காயங்களை முதலில் குணமாக்க வேண்டும். பின்னர்
ஏனையவை குறித்து நாம் பேசலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலிருந்து திருஅவை
தன் பணிகளைத் துவக்கவேண்டும்." என்று தெளிவாகக் கூறினார். போர்க்களமாக மாறியிருக்கும்
இன்றைய உலகில், திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும், காயப்பட்டிருக்கும்
உலகின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் உப்பாக, ஒளியாக திகழவேண்டும் என்று மன்றாடுவோம்.