கிராக்கோவ் உலக இளையோர் தினத்துக்குத் திருத்தந்தை மீண்டும் அழைப்பு
பிப்.08,2014. அருளடையாளங்கள், சிறப்பாக, ஒப்புரவு மற்றும் திருநற்கருணை அருளடையாளங்கள்
கிறிஸ்துவைச் சந்திப்பதற்குத் தனிச்சிறப்பான இடங்களைக் கொண்டுள்ளன என்று இச்சனிக்கிழமையன்று
வெளியிட்டுள்ள Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
போலந்து நாடு கிறிஸ்தவத்தைத் தழுவியதன் 1050ம் ஆண்டை முன்னிட்டு, 2016ம் ஆண்டில் அந்நாட்டின்
கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்துக்குத் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் வருகைதருமாறு மீண்டும் அழைப்புவிடுத்துள்ளனர் போலந்து ஆயர்கள். அட் லிமினாவையொட்டி
இவ்வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், போலந்து ஆயர் பேரவைத் தலைவர்
பேராயர் Józef Michalik, அந்நாட்டின் 44 மறைமாவட்டங்களின் அறிக்கையைச் சமர்ப்பித்து திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களையும் அந்நாட்டுக்கு அழைத்தார். போலந்தின் ஏறக்குறைய 3 கோடியே 80
இலட்சம் மக்களில் 93 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்றும், அந்நாட்டில் 10 இறையியல்
பல்கலைக்கழகங்களும், 4,262 குருத்துவ மாணவர்களும், 501 புகுமுகத் துறவியரும் உள்ளனர்
என்றும் திருத்தந்தையிடம் கூறினார் பேராயர் Michalik.