வளைகுடா நாட்டுச் சிறைகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்
பிப்.07,2014. பல்வேறு குற்றங்கள் புரிந்தது தொடர்பாக, இந்தியாவைச் சேர்ந்த மூவாயிரத்து
497 பேர் வளைகுடா நாட்டுச் சிறைகளில் துன்புற்று வருவதாக, இந்தியர்கள் நலத்துறை அமைச்சர்
வயலார் ரவி ராஜ்யசபாவில் தெரிவித்தார். ஆயிரத்து நானூறு பேர் ரியாத் சிறையிலும்,
568 பேர் ஜெட்டாவிலும், 250 பேர் குவைத்திலும், 106 பேர் ஏமனிலும், 178 பேர், கத்தார்
மற்றும் பக்ரைனில் சிறைகளிலும் உள்ளனர் என, அமைச்சர் வயலார் ரவி அறிவித்தார். வெளிநாடுவாழ்
இந்தியர் தொடர்பாக எழுந்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் வயலார் ரவி, இக்கைதிகளில்
பெரும்பாலானவர்கள், நாடுகளில் தங்கும் அனுமதி, போலி ஆவணங்கள், திருட்டுத்தனமாக நாட்டில்
குடியேறுதல் போன்ற குற்றங்கள் தொடர்பாகச் சிறைகளில் உள்ளனர் என்று தெரிவித்தார். இவர்களை
மீட்க இந்தியா போதிய ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும், இவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகள்
வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.