பிப்.07,2014. இந்திய ஆயர்களின் 31வது நிறையமர்வுக் கூட்டம் கேரளாவின் பாலாய் நகரில்
இச்செவ்வாய் முதல் இடம்பெற்று வருகிறது. இந்தியாவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர்
சால்வத்தோரே பென்னாக்கியோ அவர்கள் தலைமையில் திருப்பலியுடன் தொடங்கிய இக்கூட்டத்தில்
இந்தியத் திருஅவை மற்றும் இந்தியச் சமுதாயத்தைப் புதுப்பிப்பது குறித்து கலந்துரையாடல்கள்
நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கும், அவரின் நற்செய்திக்கும்
இன்னும் அதிக விசுவாசமாக இருக்கும் வழிகளில் இந்தியத் திருஅவை தன்னைப் புதுப்பித்துக்
கொள்ள வேண்டும் என்று தனது மறையுரையில் வலியுறுத்தினார் பேராயர் பென்னாக்கியோ. பேராயர்கள்,
ஆயர்கள், இந்திய ஆயர் பேரவைப் பணிக்குழுக்களின் செயலர்கள் என ஏறக்குறைய 185 பேர் இக்கூட்டத்தில்
கலந்து கொள்கின்றனர். 165 மறைமாநிலங்களைக் கொண்ட இந்திய ஆயர் பேரவை உலகில் நான்காவது
பெரிய ஆயர் பேரவையாகும்.