புனித யோசேப்பு காலனியைத் தீயிட்டவர்களுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
பிப்.06,2014. பாகிஸ்தான், லாகூர் நகரில் சென்ற ஆண்டு புனித யோசேப்பின் பெயர் தாங்கிய
காலனி ஒன்று தீயிடப்பட்ட வன்முறையில் ஈடுபட்டோருக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் அளிக்க
மறுத்துள்ளது. 2013ம் ஆண்டு சவன் மாசி (Savan Masih) என்பவர் தேவ நிந்தனை செய்தார்
என்ற போய் குற்றம் சுமத்தப்பட்டதால், அவர் வாழ்ந்த புனித யோசேப்பு காலனி, மார்ச் 8,9
ஆகிய தேதிகளில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இந்த வன்முறையில் ஈடுபட்ட 83 பேர் கைது
செய்யப்பட்டு, அவர்களில் 36 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 47 பேர் மீது
தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், அவர்களுக்கு ஜாமீன் மறுத்து, லாகூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த
வன்முறையால் பாகிஸ்தான், உலக மக்கள் முன் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும்,
சிறுபான்மையினர் பாகிஸ்தானில் வாழமுடியாது என்ற கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த
வன்முறை நிகழ்ந்துள்ளது என்றும் லாகூர் உயர் நீதி மன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. தேவநிந்தனை
குற்றம் சுமத்தப்பட்டுள்ள Savan Masih அவர்கள், எவ்வித விசாரணையும் இன்றி, கடந்த ஓராண்டளவாய்
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.