பிரேசில் நாட்டு ஆயர்களுக்கென நடைபெறும் பயிற்சிப் பாசறையில், நற்செய்தி
அறிவிப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni
பிப்.05,2014. புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணியைக் குறித்து இரண்டாம் வத்திக்கான்
பொதுச் சங்கம் துவங்கி ஒவ்வொரு திருத்தந்தையும் பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வந்துள்ளனர்
என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பிப்ரவரி 3, இத்திங்கள் முதல் பிப்ரவரி
7, வருகிற வெள்ளி முடிய பிரேசில் நாட்டு ஆயர்களுக்கென ரியோ டி ஜனெய்ரோ நகரில் நடைபெறும்
ஒரு பயிற்சிப் பாசறையின் துவக்க அமர்வில், நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவர்
கர்தினால் Fernando Filoni அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். மறைபரப்புதல்,
நற்செய்தி அறிவித்தல், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆகிய கருத்துக்களில் பிரேசில் ஆயர்கள்
மேற்கொண்டுள்ள இந்தப் பயிற்சிப் பாசறையில், அர்பணிக்கப்பட்ட வாழ்வு பேராயத்தின் தலைவர்
கர்தினால் João Braz de Aviz அவர்களும் கலந்துகொள்கிறார். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்
ஏடுகள், திருத்தந்தையர் இரண்டாம் ஜான்பால், 16ம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர்
வெளியிட்டுள்ள சுற்றுமடல்கள் இந்தப் பயிற்சிப் பாசறையின் அடிப்படை நூல்களாக விளங்குகின்றன
என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.