திருஅவையை சிறந்த முறையில் வெளிச்சமிட்டுக் காட்டியதற்காகஅருள்பணியாளர்
Lombardiஅவர்களுக்கு இஸ்பானிய ஆயர் பேரவையின் விருது
பிப்.05,2014. அர்பணிக்கப்பட்ட வாழ்வுக்கு ஒருவர் பெறும் அழைப்பைப் போல, தொடர்புத் துறையில்
பணியாற்றுவதையும் ஓர் அழைப்பாக உணர்வது அவசியம் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகத்தின்
இயக்குனர், இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார். 2013ம்
ஆண்டு, ஊடகத்துறையில் பணியாற்றியவர்களில் மனித மாண்பை நிலைநாட்டிய ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து,
இஸ்பெயின் நாட்டு ஆயர் பேரவை, பிப்ரவரி 5, இப்புதனன்று விருதுகள் வழங்கியது. கடந்த
ஆண்டு திருஅவையில் மாபெரும் மாற்றம் ஒன்று நிகழ்ந்தபோது, திருஅவையை இவ்வுலகிற்குச் சிறந்த
முறையில் வெளிச்சமிட்டுக் காட்டியதற்காக, அருள் பணியாளர் Lombardi அவர்களை இஸ்பானிய ஆயர்
பேரவை இவ்விருதுக்குத் தேர்ந்தது. திருப்பீடப் பத்திரிகை அலுவலகம், வத்திக்கான் வானொலி
என்ற இரு நிறுவனங்களின் இயக்குனராகவும், திருப்பீடப் பேச்சாளராகவும் பணியாற்றிவரும் அருள்
பணியாளர் Lombardi அவர்கள், திருஅவையில் தொடர்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் சார்பில்,
தான் இவ்விருதினைப் பெற்றுக்கொள்வதாகக் கூறினார். திருஅவையின் தொடர்புத் துறை எவ்விதம்
செயலாற்றுகிறது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் அருள் பணியாளர் Lombardi அவர்கள்,
மனித மாண்பை நிலைநாட்டியதற்காக வழங்கப்படும் இந்த விருதை நன்றியோடு பெற்றுக்கொள்வதாகவும்,
தான் பணியாற்றும் நிறுவனத்தில், தங்கள் கடமையை நினைவுறுத்தும் வகையில், இவ்விருது ஒரு
முக்கிய இடத்தில் வைக்கப்படும் என்றும் மகிழ்வுடன் கூறினார்.