கல்விக் கண்களைத் திறந்த இயேசு சபையினரை நேபாள நாடு நன்றியோடு எண்ணிப் பார்க்கிறது
பிப்.05,2014. அறிவுக்குப் பிறப்பிடமாக சரஸ்வதியை இந்து பாரம்பரியம் கொண்டாடும்போது,
அந்த அறிவை, பள்ளிகள் வழியே தந்த இயேசு சபையினரை நேபாள நாடு நன்றியோடு எண்ணிப் பார்க்கிறது
என்று நேபாள அறிஞர்கள் கூறினர். பிப்ரவரி 4, இச்செவ்வாயன்று, கல்வியின் பிறப்பிடமான
சரஸ்வதியைக் கொண்டாடும் ஸ்ரீ பஞ்சமி என்ற திருநாளின்போது, நேபாள நாட்டில் கல்விக் கண்களைத்
திறக்க உழைத்த இயேசு சபையினரை அந்நாட்டு கல்வியாளர்கள் பாராட்டினர் என்று ஆசிய செய்தி
நிறுவனம் கூறியுள்ளது. அந்நாட்டின் கல்வி அமைச்சகம் சார்பில் பேசிய Mahasram Sharma
அவர்கள், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயேசு சபையினர் அந்நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு
மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் பாராட்டினார். காத்மண்டுவில் இயங்கிவரும் புனித
பிரான்சிஸ் சேவியர் கல்லூரியின் முதல்வர், அருள் பணியாளர் Thomas Augustine அவர்கள்,
இயேசு சபையினருக்குக் கிடைத்த இந்த பாராட்டிற்கு நன்றி தெரிவித்ததோடு, கல்விப் பணியில்
தொடர்ந்து இயேசு சபையினர் தீவிர முயற்சிகள் மேற்கொள்வர் என்று உறுதி கூறினார்.