2014-02-03 16:05:58

தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு, ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள்


பிப்.03,2014. மனிதர்கள், விலங்குகளைப் போலவே, தாவரங்களுக்கும் நினைவாற்றல் இருப்பதாக, ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின், உயிரியல் பரிமாணங்கள் பற்றிய ஆய்வாளர்கள், தாவரங்களின் கற்கும் திறன் பற்றி மேற்கொண்டுள்ள ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெவ்வேறு பருவநிலைகளில், வெவ்வேறு சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தாவரங்களின் கற்கும் திறன், நினைவாற்றல் மாறுபடுவது தங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ள ஆய்வாளர்கள், இது, தாவரங்கள் பற்றிய மேலும் சில ஆய்வுகளுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது என, தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
பொதுவாக, விலங்குகள், மனிதர்களைப் போலவே, கற்கும் திறன் படைத்தவை. விலங்குகளுக்கு மூளை இருப்பதால், இயற்கையாக கற்கும் செயல்களையும், மனிதர்களால் கற்பிக்கப்படும் செயல்களையும், அவை மீண்டும் நினைவுகூர்ந்து செயலாற்றுகின்றன. இதன்மூலம் விலங்குகளுக்கு நினைவாற்றல், கற்கும் திறன் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தாவரங்களும் நினைவாற்றல் பெற்றுள்ளன என மேலும் அந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தாவரங்களுக்கு மூளை கிடையாது. எனினும், தாவரங்கள் இயற்கையால் தங்களுக்கு நேரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து அதற்கேற்ப செயல்படுகின்றன. அதேபோல், தாவரங்களுக்கு கற்கும் திறனும் உண்டு. தாவரங்களில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.