2014-01-30 16:13:09

'சூப்பர்' நாயகனாக திருத்தந்தையைச் சித்திரித்துள்ளார் இத்தாலிய ஓவியர் Mauro Pallotta


சன.30,2014. கத்தோலிக்க உலகின் தலைவர் என்ற உயர்ந்த அதிகாரத்தைக் கொண்டு, உலகிற்கு நன்மைகள் ஆற்றிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஒரு சக்திவாய்ந்த நாயகனாக தான் வடித்துள்ளதாக ஓர் இத்தாலிய ஓவியர் கூறினார்.
குழந்தைகளின் சித்திரத் தொடர்களில் வரும் 'சூப்பர்' நாயகர்களைப் போல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருமையான எண்ணங்களை மக்கள் மனங்களில் விதைப்பதால், அவரை ஒரு 'சூப்பர்' நாயகனாக தான் சித்திரித்துள்ளதாக ஓவியர் Mauro Pallotta அவர்கள் கூறினார்.
அமெரிக்க நாட்டில் புகழ்பெற்றுள்ள American Marvel என்ற சித்திரத் தொடர்களில் காணப்படும் நாயகர்களை ஒத்த ஓர் வடிவத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஓவியர் Pallotta அவர்கள், வத்திக்கானுக்கு அருகில் அமைந்துள்ள Via Plauto என்ற சாலையில் வடித்துள்ளது, ஊடகங்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது.
தான் வடிவமைத்துள்ள இந்த ஓவியத்தின் அசலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நேரில் அளிக்க விரும்புவதாகவும் ஓவியர் Pallotta அவர்கள் CNA கத்தோலிக்கச் செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.