ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் திருத்தந்தையை வந்து சேருகின்றன
சன.30,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முகவரிக்கு ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான
கடிதங்களும், ஓவியங்களும், ஏனைய 'பார்சல்' கட்டுகளும் வந்தவண்ணம் உள்ளன என்று வத்திக்கான்
அதிகாரி ஒருவர் கூறினார். திருத்தந்தையின் தபால்களைக் கண்காணிக்கும் அலுவலகத்தின்
ஒருங்கிணைப்பாளர், அருள் பணியாளர் Giuliano Gallorini அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு
அண்மையில் அளித்த பேட்டியொன்றில், தங்கள் அலுவகலகம் இயங்கும் விதத்தையும், சந்திக்கும்
சவால்களையும் குறித்து விளக்கினார். ஒவ்வொரு வாரமும் திருத்தந்தையை வந்து சேரும் 30க்கும்
அதிகமான தபால் மூட்டைகளில் பெரும்பாலான கடிதங்கள் திருத்தந்தையின் செபங்களுக்காக விண்ணப்பித்து
எழுதப்பட்டுள்ள கடிதங்கள் என்றும், இவற்றில் பெரும்பாலானவை சிறுவர், சிறுமியர் மற்றும்
இளையோரிடமிருந்து வருகின்றன என்றும் அருள் பணியாளர் Gallorini அவர்கள் குறிப்பிட்டார். முக்கியமான
செய்திகள் தாங்கிய பல கடிதங்களை, திருத்தந்தை தானே நேரில் வாசித்து, அவற்றிற்குரிய பதில்கள்
எவ்வகையில் அமையவேண்டும் என்பதை அவர் குறிப்பிடுகிறார் என்று கூறிய அருள் பணியாளர் Gallorini
அவர்கள், ஒரு சில வேளைகளில் இக்கடிதங்களுக்குப் பதில் தருவதுபோல், கடிதம் எழுதியவர்களை,
திருத்தந்தை நேரில் அழைக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகின்றன என்று கூறினார்.