சீனாவில் தொடர்ந்து ஆலயங்கள் தாக்கப்படுகின்றன, கர்தினால் ஜென்
சன.28,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணி நம்பிக்கையளிக்கும் அதேவேளை,
சீனாவின் மத விவகாரத் துறையும் சீன அரசுக்கு விசுவாசமாக இருக்கும் கத்தோலிக்கத் திருஅவையும்,
திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் ஆயர்களையும் விசுவாசிகளையும் அடிமைகளாக நடத்த விரும்புகின்றன
என்று ஹாங்காங் கர்தினால் ஜோசப் ஜென் கூறினார். சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகள்
தொடங்கவிருக்கும் புதிய ஆண்டுக்கு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் நல்வாழ்த்துச் சொல்லியது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்தினால்
ஜென், சீனாவில் திருஅவையின் நிலைமை கவலை தருவதாகவே உள்ளது எனக் கூறினார். இந்தப்
புதிய குதிரை ஆண்டிலும் ஆலயங்கள் தாக்கப்படுவது தொடர்கின்றன எனவும், இதனால் அதிகாரிகள்
மதங்களை மட்டும் அழிக்கவில்லை, நாட்டின் நல்ல பெயரையும் அழிக்கின்றனர் எனவும் கூறினார்
ஹாங்காங்கின் முன்னாள் பேராயர் கர்தினால் ஜென்.
சீனா, வியட்நாம், கொரியா ஆகிய
நாடுகளில் சனவரி 31ம் தேதியன்று தொடங்கும் புதிய ஆண்டு, குதிரை ஆண்டாகும்.