சனவரி 26, இஞ்ஞாயிறன்று,
இந்தியாவில் 65வது குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் மன்னர்களால்
ஆளப்பட்ட இந்தியா, சில நூறு ஆண்டுகள், அன்னியர்களால் ஆளப்பட்டது. இவ்வாறு, முடியாட்சியை
சுமந்து வருந்திய இந்திய மக்கள், இனி வேறு யாரும் எங்களை ஆட்சி செய்யவேண்டாம்; எங்களை
நாங்களே ஆட்சி செய்வோம் என்று உலகறியப் பறைசாற்றிய நாள் குடியரசு நாள். இந்த வரலாற்றுப்
பின்னணி, நம் மனங்களை உண்மையிலேயே பெருமையுறச் செய்கிறது. 21ம் நூற்றாண்டில், உலகிலேயே
மிகப் பெரிய குடியரசு நாடு இந்தியாதான் என்ற உலகச்சாதனை, நம்மை மேலும் தலைநிமிரச் செய்கிறது.
இந்த
வரலாற்றுப் பெருமைகளை விழுங்கிவிடும் வேதனை எண்ணங்களும் மனதை நெருடுகின்றன. கடந்த 64
ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆட்சியைச் சிந்திக்கும்போது, இது குடியாட்சியா
அல்லது, குடியாட்சி என்ற போர்வையில் ஒரு சில முடிசூடா மன்னர்கள் நடத்தும் சர்வாதிகார
ஆட்சியா என்ற கேள்வி மனதை வதைக்கிறது. இந்திய மக்களுக்கு, குறிப்பாக, வறுமையில் வாடும்
பல கோடி இந்திய மக்களுக்கு, இந்த 65வது குடியரசு நாள், மக்களாட்சியை நிலைநாட்டும் ஒரு
நாளாக அமையவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். அணுகிவரும் பாராளுமன்றத் தேர்தலில்,
குடியரசை மீண்டும் ஆட்சியில் அமரச்செய்யும் தன்னலமற்றத் தலைவர்களை, இந்திய மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்
என்றும் இறைவனிடம் உருக்கமாகச் செபிப்போம்.
குடியரசு நாள் கொண்டாட்டங்கள் என்று
சொல்லும்போது, இந்தியாவில் எதைக் கொண்டாடுகிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். குடியரசு
நாளன்று, மக்களாட்சியைப் பறைசாற்றும் அம்சங்களைக் கொண்டாடுவது பொருத்தமானது. ஆனால், கடந்த
பல ஆண்டுகளாக, புதுடில்லியில் நடைபெறும் அணிவகுப்பு ஒன்றே குடியரசு நாளின் முக்கிய கொண்டாட்டம்
என்று உலகிற்குக் காட்டப்படுகிறது. இந்த அணிவகுப்பில், மக்களின் கலாச்சாரங்கள் அணிவகுத்துச்
செல்கின்றன என்றாலும், இந்திய அரசின் இராணுவ வலிமையே பெருமளவு விளம்பரப்படுத்தப்படுகின்றது.
இதுதான் குடியரசு நாள் கொண்டாட்டமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
கொண்டாட்டங்கள்
ஆடம்பரமாய், ஆர்ப்பாட்டமாய், பிரமாதமாய், பிரமிப்பூட்டுவதாய் இருக்கவேண்டும், என்பது
உலகில் பல நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் பின்பற்றும் சிந்தனை. இந்நிறுவனங்களின், கட்சிகளின்
ஆரம்பவிழாக்கள் பல கோடி ரூபாய் செலவில் அமர்க்களமாய் இருக்கும்; எதிர்பார்ப்பை உருவாக்கும்.
இவ்விதம் ஆரம்பிக்கப்பட்ட பல நிறுவனங்கள், பல அரசியல் கட்சிகள் வரலாற்றில் எவ்விதச் சுவடும்
பதிக்காமல் சென்றுள்ளன. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் சொல்லத் தேவையில்லை. இவற்றிற்கு
முற்றிலும் மாறுபட்ட ஓர் எடுத்துக்காட்டாக, முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா அவர்கள்
ஆரம்பித்த பிறரன்புச் சகோதரிகள் சபையை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். உடலெல்லாம் புண்ணாகி,
நாற்றம் எடுத்து, சாக்கடைக்கருகில் சாகக்கிடந்த ஒரு நோயாளிக்குச் செய்த பணியில் ஆரம்பமானது
இச்சபை. பிறந்த நாட்டைவிட்டு, வேறொரு நாட்டில் தனியொரு பெண்ணாக அன்னை தெரேசா ஆரம்பித்த
அற்புதப் பணிக்கு எந்த ஆரம்பவிழாவும், ஆர்ப்பாட்டமும் இல்லை. அப்பெண்ணின் மன உறுதியைக்
கண்டு இன்னும் 12 பெண்கள் அவருடன் சேர்ந்தனர். இவ்விதம் ஆரம்பமான பிறரன்புச் சகோதரிகள்
சபை, இன்று உலகெங்கும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பணிகளைத் தொடர்கின்றது. அர்த்தமுள்ள
ஒரு வரலாறு எழுதப்பட்டு வருகின்றது. பிறரன்புச் சேவையில் இறங்கிய ஒரு பெண், அவரைச்
சுற்றி 12 பெண்கள் என்ற இந்த வரலாற்றுக் குறிப்பு, நம் நினைவை 20 நூற்றாண்டுகள் பின்னோக்கி
அழைத்துச் செல்கிறது. அந்த நினைவு இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு தன்
பணிவாழ்வை ஆரம்பித்த நிகழ்வையும், தன் பன்னிரு சீடர்களில் ஒரு சிலரை அழைத்ததையும் இன்றைய
நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். ஆர்ப்பாட்டம் ஏதுமற்ற, அடக்கமான, ஆழமான ஆரம்பம் இது.
இயேசு
ஆரம்பித்த பணிவாழ்வினை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர்
மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். “காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக்
கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.”
(எசாயா 9: 2; மத்தேயு 4: 16) ஒளி ஓர் அழகிய உருவகம்.
அட்டகாசமான, அர்த்தமற்ற ஆரம்பங்களையும், அமைதியான, அர்த்தமுள்ள ஆரம்பங்களையும் இயற்கையில்
நாம் காணும் மின்னல், சூரியஒளி என்ற இருவகை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தலாம். அட்டகாசமான
ஆரம்பங்கள் மின்னலைப் போன்றவை. பளீரெனத் தோன்றி மறையும் ஒவ்வொரு மின்னலும் பலகோடி 'வாட்ஸ்'
(Watts) மின்சக்தி கொண்டது. ஒரே ஒரு மின்னல் உருவாக்கும் சக்தியைப் பயன்படுத்தமுடிந்தால்,
மும்பை அல்லது சென்னை போன்ற பெருநகரங்களுக்குப் பல மாதங்களுக்குத் தேவையான மின்சக்தி
தரமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மின்னலின் சக்தியைச் சேமிக்கும் கருவிகள் இல்லாததால்,
மின்னல்கள் பயனில்லாமல் தோன்றி மறைகின்றன. பல சமயங்களில் மின்னல்களால் தீமைகள் விளைவதும்
உண்டு. அட்டகாசமான ஆரம்பங்கள் மின்னலைப் போன்றவை. இதற்கு மாறானது சூரியஒளி. இரவு முடிந்து
பகலவன் எழும்போது, பளீரென உதயமாவதில்லை. அமைதியாய், ஆர்ப்பாட்டமில்லாமல், சிறு, சிறு
ஒளிக் கீற்றுக்களாய் சூரியன் உதயமாகிறது. இப்படி அமைதியாய் உதிக்கும் சூரியஒளியால் பல்லாயிரம்
உயிர்கள் பயனடைகின்றன. இயேசுவின் பணி வாழ்வு ஆதவனைப்போல் ஆரம்பமானது.
இயேசு என்ற
தலைவன், தன் பணிவாழ்வின் ஆரம்பத்தில், மக்கள் முன் சொன்னதாக, மத்தேயு, மாற்கு ஆகிய இரு
நற்செய்தியாளர்களும் பதிவுசெய்துள்ள வார்த்தைகள் இவையே: "மனம் மாறுங்கள்,
ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது." (மத்தேயு 4: 17)
இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து இயேசு செய்த முதல் வேலை... தன் பின்னே வரும்படி ஒரு சில
மீனவர்களை அழைத்தது... ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் என்ற உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தால்,
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்த விதம் ஏமாற்றம் தருவதாக உள்ளது. ஒரு பிரம்மாண்டமான புதுமையைச்
செய்து அவர் தன் பணியை ஆரம்பித்திருக்கலாம். இதைத்தான் அலகையும் அவருக்குச் சொல்லித்தந்தது.
எருசலேம் தேவாலயத்தின் உச்சியில் இருந்து குதிக்கச்சொன்னது. ஆனால், இயேசு தன் பணிவாழ்வை
ஆரம்பித்தவிதம் அமைதியாக இருந்தது. அவர் முதன்முதலாகச் சொன்ன வார்த்தைகள் புதிராகவும்
இருந்தன. "மனம் மாறுங்கள்" என்று மக்களுக்குச் சொன்னார். "என் பின்னே வாருங்கள்" என்று
மீனவர்கள் ஒரு சிலரிடம் சொன்னார். கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்கள் இவை: மனமாற்றம்,
இயேசுவைப் பின்தொடர்தல்.
மனமாற்றம் அனைவருக்கும் தேவையான ஓர் அழைப்பு. இதை நம்மால்
புரிந்துகொள்ள முடிகிறது. இயேசுவைப் பின்தொடர்தல் என்பது துறவறத்தார், அருள் பணியாளர்கள்
ஆகியோருக்குத்தான்; அனைவருக்கும் அல்ல என்பது பொதுவாக நாம் எடுக்கும் முடிவு. ஆழச் சிந்தித்தால்,
மனம் மாறுவதும், இயேசுவைப் பின்தொடர்வதும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்ற உண்மை விளங்கும்..
மாற்றம் என்பது பழைய நிலையை விட்டு விலகி, புதிய நிலைக்குச் செல்வது. வேலை மாற்றம்,
வீடு மாற்றம், படிப்பு மாற்றம் என்ற இந்த மாற்றங்கள் வெளிப்புற மாற்றங்கள். ஓரளவு எளிதான
மாற்றங்கள். உள்ளமாற்றம், மனமாற்றம் என்பது மிகவும் கடினமானது. நமது மனதில் ஆணிவேர்விட்டு
வளர்ந்துவிட்ட எண்ணங்கள், ஆசைகள், பழக்கங்கள் இவற்றை மாற்றி, புதிய எண்ணங்களைக் கொண்டுவருவது
எளிதல்ல. இவ்வகை மாற்றங்கள் உருவாக ஒரு முக்கிய உந்துதலாக இருக்கக்கூடியது, அன்பு, பாசம்,
காதல்... நாம் மற்றொருவர்மீது ஆழமான ஈடுபாடு கொள்ளும்போது, அந்த மற்றொருவருக்காக நம்மிடம்
எத்தனையோ அடிப்படை மாற்றங்களைச் செய்துகொள்ள தயாராகிறோம்.
கிறிஸ்தவ வாழ்வின் இரு
முக்கிய அம்சங்களான மனம் மாறுங்கள், என் பின்னே வாருங்கள் என்ற இந்த இரு அழைப்பினையும்
நாம் இந்தக் கோணத்தில் இணைத்துப் பார்க்க முடியும். இயேசுவின் மீது ஆழமான ஈடுபாடு கொண்டு,
அவரைப் பின்செல்ல நாம் ஆரம்பித்தால், மாற்றங்கள், மனமாற்றங்கள், வாழ்வின் அடிப்படை மாற்றங்கள்
எளிதில் உருவாகும். இயேசுவினால் ஈர்க்கப்பெற்று, அவரது அழைப்பை ஏற்று, சீடர்கள் அவரைப்
பின்சென்றனர். தங்கள் வாழ்வின் ஆதாரங்களான மீன்பிடிக்கும் தொழில், தங்கள் படகுகள், தங்கள்
தந்தை என்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு இயேசுவைப் பின்சென்ற சீடர்களின் வாழ்வு
முற்றிலும் மாறியது.
மாற்றத்தைப் பற்றிப் பேசும்போது, 'மாற்றங்கள் நாமாக இருப்போம்'
(‘Let’s be the change’ – The Hindu, January 24, 2014) என்ற தலைப்புடன் நாளிதழ் ஒன்றில்
அண்மையில் நான் வாசித்த ஒரு செய்தி என் மனதில் தோன்றுகிறது. அணுகிவரும் பாராளுமன்றத்
தேர்தலும், குடியரசு நாளும் உங்கள் மனதில் உருவாக்கும் ஒரு முக்கிய எண்ணம் என்ன என்று
அந்த நாளிதழ், இளையோரிடம் கருத்து கேட்டபோது, இளையோரில் பலர் கூறியது இதுதான்: "இந்தியாவில்
எத்தனையோ நல்ல மாற்றங்கள் தேவை. அந்த மாற்றங்கள் என்னிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்று
விரும்புகிறேன்" என்ற கருத்து பல இளையோரிடமிருந்து வந்தது. மிகவும் அற்புதமான ஒரு
கருத்து. இந்த உறுதி, இன்றைய இளையோர் அனைவரிடமும் பரவினால் கட்டாயம் இந்தியா ஒரு தலைசிறந்த
குடியரசாக உலகில் தலைநிமிர்ந்து நிற்கும். நாளையத் தலைமுறையினர் இந்தியாவை நல்வழியில்
அழைத்துச் செல்வர் என்று நம்பிக்கை கொள்வோம்.