மத்திய கிழக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறிவருவது குறித்து திருப்பீடம் கவலை
சன.24,2014. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக, தங்களின் தாயகமாகக் கொண்டிருந்த மத்திய
கிழக்கு நாடுகளைவிட்டு கிறிஸ்தவர்கள் வெளியேறிவருவது திருப்பீடத்துக்கு மிகுந்த கவலை
தருகின்றது என, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார். பாலஸ்தீனியப்
பிரச்சனை உட்பட மத்திய கிழக்கில் மக்களின் நிலை என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு அவையில்
நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர்
பேராயர் பிரான்சிஸ் சுள்ளிகாட் இவ்வாறு கூறினார். மத்திய கிழக்குப் பகுதியில் அடிப்படைவாத
மற்றும் தீவிரவாதச் சக்திகள் அடிக்கடி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்குகின்றன என்றுரைத்த
பேராயர் சுள்ளிகாட், அப்பகுதியில் புதியதொரு புரிந்துகொள்ளுதலையும், ஒருவர் ஒருவர் மீதான
நம்பிக்கையையும் ஏற்படுத்த அனைத்து மதத்தினரும் எடுக்கும் முயற்சிகளுக்குத் திருப்பீடம்
ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.