திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை நீதிபதிகள் முதலில் ஆன்மாக்களின் மேய்ப்புப்பணியாளர்கள்
சன.24,2014. திருஅவை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள், தாங்கள் ஆன்மாக்களின் மேய்ப்புப்பணியாளர்கள்
என்பதை முதலில் நினைவில் இருத்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்கத்
திருஅவையின் உச்ச நீதிமன்றமாகிய ரோமன் ரோத்தா, புதிய ஆண்டைத் தொடங்கியுள்ளதையொட்டி, அதன்
உறுப்பினர்கள் மற்றும் அதன் மாணவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய
திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வொரு வழக்குக்குப் பின்னும் மக்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்
என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினார். திருஅவையில் நீதித்துறையின் பணி, நீதியில்
உண்மைக்கு ஆற்றும் பணி என்றும், விசுவாசிகளின் நலன் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைக் கட்டியெழுப்ப
வேண்டிய ஆழமான மேய்ப்புப்பணியை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை. மனிதமும்,
நீதியும், மேய்ப்புப்பணி ஆர்வமும் நிறைந்த பண்புகளைத் திருஅவையில் நீதிபதிகளாய் இருப்பவர்கள்
கொண்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த நீதிபதிகள் தங்களது தொழிலில்
திறமையும் நுட்பமும் கொண்டிருந்தாலும் அவர்கள் முதலில், நல்ல ஆயராம் கிறிஸ்துவின் வழியில்
பின்செல்ல வேண்டிய ஆன்மாக்களின் மேய்ப்பர்கள் என்பதையும் நினைவுபடுத்தினார்.