சன.24,2014. ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் Francois Hollande அவர்களை இவ்வெள்ளி உள்ளூர் நேரம்
காலை 10.30 மணிக்கு, திருப்பீடத்தில் சந்தித்து ஏறக்குறைய 35 நிமிடங்கள் கலந்துரையாடினார்
திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ
பரோலின், திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி
ஆகியோரையும் சந்தித்தார் ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் Hollande. பிரான்சுக்கும் திருப்பீடத்துக்கும்
இடையே நிலவும் நல்லுறவு, பொதுநலனைக் காப்பதில் மதங்களின் பங்கு, மனித மாண்பைப் பாதுகாத்து
ஊக்குவித்தல், குடும்ப நலன், வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்படல் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில்
இடம்பெற்றன என திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் கூறியது. மேலும், அனைத்துலக அளவில்
வறுமை ஒழிப்பு, குடியேற்றதாரர் நலன், மத்திய கிழக்குப் பகுதியிலும், சில ஆப்ரிக்க நாடுகளிலும்
இடம்பெறும் சண்டை போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அறிவித்த அப்பத்திரிகை அலுவலகம்,
சண்டைகள் இடம்பெறும் பகுதிகளில், ஒவ்வொரு மனிதரின் உரிமைகள் மதிக்கப்பட்டு, சமுதாயத்தின்
அனைத்து தரப்பினரும் பங்குகொள்ளும் உரையாடல் மூலம் அமைதியைக் காணுமாறு ப்ரெஞ்ச் அரசுத்தலைவரிடம்
கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறியது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பதற்கு
ப்ரெஞ்ச் அரசுத்தலைவருடன் சென்ற குழுவில், காமரூன் நாட்டில் கடத்தப்பட்டு, பின்னர் விடுதலை
செய்யப்பட்ட ஓர் அருள்பணியாளரும் இருந்தார்.