மதச்சார்பற்ற, ஓர் அரசியல் கட்சியே இந்தியாவை வழிநடத்த வேண்டும் - இந்தியப்
பொருளாதார அறிஞர் Amartya Sen
சன.23,2014. மதச்சார்பற்ற, அடிப்படைவாதக் கொள்கைகள் அற்ற ஓர் அரசியல் கட்சியே இந்தியாவை
வழிநடத்த வேண்டும் என்று நொபெல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞர் Amartya Sen
அவர்கள் கூறினார். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் அண்மையில் உரையாற்றிய Amartya Sen
அவர்கள், ஏழைகளின் வாழ்வை உயர்த்தும் திட்டங்கள் கொண்ட அரசு நமக்குத் தேவை என்பதை வலியுறுத்தினார். குழந்தைகளுக்குத்
தரமான கல்வி தருவதற்கும், மதத்தை முன்னிறுத்தாமல், மக்களை, குறிப்பாக ஏழைகளை முன்னிறுத்துவதற்கும்
முயலும் கட்சிகளையே பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று Amartya
Sen அவர்கள் கூறினார். ஏழைகளையும், சமுதாயத்தில் புறந்தள்ளப்பட்டவர்களையும் குறித்து
ஊடகங்கள் சரியான, உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன்
எடுத்துரைத்தார் நொபெல் பரிசு வென்ற Amartya Sen அவர்கள். இதற்கிடையே, வருகிற தேர்தலையொட்டி,
பெங்களூருவில் இயேசு சபையினர் நடத்தும் இந்திய சமுதாய ஆய்வு நிலையத்தில், ஏழைகள் விடுக்கும்
கொள்கை அறிக்கையொன்று அண்மையில் வெளியிடப்பட்டது.