2014-01-23 16:01:10

கருக்கலைப்பை ஆதரிப்பவர்கள் பொய்யான பல காரணங்களில் புகலிடம் தேடுகின்றனர் - கர்தினால் Sean O'Malley


சன.23,2014. கருக்கலைப்பை சட்டமயமாக்கும் முயற்சிகளை ஆதரிப்பவர்கள் பொய்யான பல காரணங்களில் புகலிடம் தேடுகின்றனர் என்று அமெரிக்காவின் பாஸ்டன் பேராயர் கர்தினால் Sean O'Malley அவர்கள் கூறினார்.
சனவரி 22, இப்புதனன்று வாஷிங்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட உயிர் காக்கும் பேரணிக்கு முன்னதாக நடைபெற்ற இரவுத் திருவிழிப்பு முயற்சியை திருப்பலியுடன் துவக்கிய கர்தினால் O'Malley அவர்கள், இவ்வாறு கூறினார்.
ஆடைகள் ஏதுமின்றி ஊர்வலம் வந்த அரசனிடம் உண்மையைச் சொல்வதற்கு அஞ்சி, மக்கள் அவர் அணிந்த ஆடையைப் புகழ்ந்தபோது, குழந்தை ஒன்று அஞ்சாமல் உண்மையைப் பகர்ந்த கதையை எடுத்துரைத்துப் பேசிய கர்தினால் O'Malley அவர்கள், அக்குழந்தை உண்மையைக் கூறியதைப் போல, கருக்கலைப்பு தவறு என்பதை எடுத்துச் சொல்லும் நேரம் இது என்று வலியுறுத்தினார்.
கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் பேரணி முயற்சியில் தானும் தவறாமல் கலந்துகொண்டு வருவதை எடுத்துரைத்த கர்தினால் O'Malley அவர்கள், இவ்வாண்டு வாஷிங்டன் நகர் பனிப் புயலால் பாதிக்கப்பட்டாலும் அங்கு கூடியிருந்தோரைப் பாராட்டினார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.