மலேசியாவில் சமய சுதந்திரத்துக்காகப் போராடும் அருள்பணி லாரன்சுக்கு ஆதரவாக கோலாலம்பூர்
பேராயர்
சன.21,2014. மலேசியாவில் சமய சுதந்திரத்துக்காகப் போராடும் அருள்பணியாளர் லாரன்சுக்கு
எதிரான நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, இந்த அருள்பணியாளர்க்கு எதிரானச்
செயல்பாடுகள் அந்நாட்டின் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்துக்கு எதிரான தாக்குதல்கள் என்று
கூறியுள்ளார் கோலாலம்பூர் பேராயர் மர்ஃபி பாக்யம். கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற
சொல்லைக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தலாம் என்பதற்காகப் போராடிவரும் ஹெரால்டு மலேசியா இதழின்
ஆசிரியர் அருள்பணி லாரன்சின் உருவப்படம் எரிக்கப்பட்டுள்ளது மற்றும் அவ்வருள்பணியாளர்
கொலை மிரட்டல்களை எதிர்நோக்கியிருப்பது குறித்து மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள
பேராயர் பாக்யம், அவ்வருள்பணியாளரின் உரிமைப் போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கடவுளைக்
குறிப்பதற்கு அல்லா என்ற சொல் உள்ளூர் மொழி விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு,
400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இலத்தீன்-மலாய் அகராதியில் சான்றுகள் உள்ளன. இந்த அகராதி சில
ஆண்டுகளுக்கு முன்னர் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 60
விழுக்காட்டினர் முஸ்லிம்களாக வாழும் மலேசியாவில் கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல்லைக்
கிறிஸ்தவர்கள் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இவ்விவகாரம் நீதிமன்றத்தில்
உள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக சேலாங்கூரில் அண்மையில் நூற்றுக்கணக்கான விவிலியப்
பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.