2014-01-20 16:14:32

வத்திக்கானின் பொதுஇடங்களில் பாதுகாப்பு வழங்கும் இத்தாலியக் காவல்துறைக்குத் திருத்தந்தை பாராட்டு


சன.20,2014. வத்திக்கானின் பொது இடங்களில் பாதுகாப்பை வழங்கிவரும் இத்தாலியக் காவல்துறையின் பணிகளுக்கு, தன் நன்றியையும் பாராட்டையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் நாட்டு பொது இட பாதுகாப்பிற்கென இத்தாலிய அரசால் நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை குழுவை, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய பேதுரு பேராலய வளாகத்தில் மக்கள் அமைதியான முறையிலும் செப உணர்வோடும் செல்வதற்கு காவல்துறை வழங்கிவரும் அமைதிச்சூழல் பெருமளவில் உதவுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.
திருத்தந்தையைச் சந்திக்கவும், தூய பேதுரு கல்லறையைத் தரிசிக்கவும் வத்திக்கான் வரும் விசுவாசிகளுக்கு, இத்தாலியக் காவல்துறை வழங்கும் பாதுகாப்பு குறித்து பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகளும் சுற்றுலாப்பயணிகளும் காவல்துறையிடமிருந்து அன்புடன் பெறும் பாதுகாப்பு உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
திருத்தையர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாட்களில் மக்கள் கூட்டத்தை சமாளிப்பதில் இத்தாலியக் காவல்துறை, குறிப்பாக வத்திக்கானின் பொது இட பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை குழு வழங்கியுள்ள பாதுகாப்பு வசதிகளுக்கும் தன் பாராட்டுக்களையும் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.