திருத்தந்தை:ஆண்டவரே உமது அமைதியைத் தாரும் என்று இறைஞ்சுவதில் துணிச்சலை இழக்கக் கூடாது
சன.17,2014. செபம் எத்துணை வலிமை வாய்ந்தது! ஆண்டவரே உமது அமைதியை எங்களுக்கு அளித்தருளும்
என்று இறைஞ்சுவதில் நாம் ஒருபோதும் துணிச்சலை இழக்காதிருப்போம் என்று இவ்வெள்ளியன்று
Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், Floreria என்ற பணியாளர்
குழுவை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான்
பசிலிக்கா, வத்திக்கான் தூய பேதுரு வளாகம், திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கம், அப்போஸ்தலிக்க
மாளிகை, உரோம் நகரின் பாப்பிறை பசிலிக்காக்கள் போன்றவற்றில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்,
இன்னும், திருத்தந்தையரின் பொது நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு இவர்கள் ஆற்றும் பணிகளுக்குத்
தனது நன்றியையும் தெரிவித்தார். இப்பணிக்கு நிறைய பொறுமையும், தியாக உணர்வும்
தேவை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இப்பணியாளர்கள் வெளிப்படுத்தும் பொறுமை, நன்மைத்தனம்,
நிதானம் போன்ற பண்புகளில் தொடர்ந்து வளருமாறும் கேட்டுக்கொண்டார். Floreria என்ற
பணியாளர்கள், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை உட்பட, திருத்தந்தையர்
நடத்தும் நிகழ்வுகளில் இருக்கைகளை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளைச் செய்கின்றனர்.