2014-01-10 15:43:12

திருத்தந்தை: நம் அன்றாட வாழ்வில் எளிமைப் பண்புக்குச் சான்றுபகர, இயேசுவின் பிறப்பு நம்மை அழைக்கின்றது


சன.10,2014. நம் அன்றாட வாழ்வில் தாழ்மை, எளிமை, சேவையுணர்வு ஆகியவற்றுக்குச் சான்றுபகர, இயேசு பிறப்பின் பேருண்மை நம்மை அழைக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
sediari pontifici என அழைக்கப்படும் வத்திக்கானில் பணிசெய்யும் ‘பல்லக்கு தூக்கிகள்’ குழுவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், இவர்கள் தங்களது அன்றாடப் பணிகளில் இறைமகனின் பண்புகளை வெளிப்படுத்த முடியும் எனவும் கூறினார்.
செபத்தில் நம் ஆண்டவரோடு உரையாடுவதிலும், அவரோடு நட்புறவு கொள்வதிலும் வளர்ந்தால், ஒவ்வொரு நாளும் தாங்கள் சந்திக்கும் மனிதருக்குக் கிறிஸ்தவ மகிழ்வை வழங்க முடியும் என இப்பணியாளர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில், நாம் பெத்லகேம் குழந்தையின்முன் நின்று கடவுளின் கனிவு நம் இதயங்களை வெப்பமூட்ட அனுமதிப்போம் என எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.