வன்முறை நிறைந்துள்ள பங்களாதேஷ் நாட்டில் கிறிஸ்தவர்கள்நம்பிக்கை தரும்
செய்தி, Dhakaபேராயர்
சன.09,2014. வன்முறையும் குழப்பமும் நிறைந்துள்ள பங்களாதேஷ் நாட்டில் வாழும் சிறுபான்மையான
கிறிஸ்தவர்கள், அந்நாட்டிற்கு நம்பிக்கை தரும் செய்தியாக விளங்குகின்றனர் என்று Dhaka
பேராயர் Patrick D'Rozario அவர்கள் கூறினார். சனவரி 5, கடந்த ஞாயிறன்று பங்களாதேஷில்
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலையொட்டி நிகழ்ந்த வன்முறைகளின் மத்தியில் கிறிஸ்தவர்கள்
தங்கள் தாயகத்திற்காக எழுப்பிய செபங்கள் நம்பிக்கை தருகின்றன என்று பேராயர் Patrick D'Rozario
அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார். இதற்கிடையே, Mymensingh மறைமாவட்டத்தைச்
சேர்ந்த கிறிஸ்தவர்களில் சிலர் வாக்களிக்கச் சென்றபோது, இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களால்
தாக்கப்பட்டனர் என்றும், இத்தாக்குதலில் அம்மறை மாவட்ட ஆயர் Paul Ponen Kubi அவர்களின்
சகோதரரும் காயமடைந்தார் என்றும் ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது. 2008ம் ஆண்டு நடைபெற்ற
தேர்தலில் 70 விழுக்காட்டு மக்கள் வாக்களித்தனர் என்றும், 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்
20 விழுக்காட்டு மக்களே வாக்களிப்பில் கலந்து கொண்டனர் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.