தென் சூடானின் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உலக நாடுகளின் தலையீடு உடனடியாகத் தேவை,
ஆயர்கள்
சன.09,2014. தென் சூடானில் நடைபெறும் வன்முறைகளும் கொலைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு
உலக நாடுகளின் தலையீடு மிகவும் துரிதமாகத் தேவைப்படுகிறது என்று தென் சூடான் ஆயர்கள்
கூறியுள்ளனர். அரசியல் தலைவர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே உருவாகியுள்ள மோதல்களால்
இதுவரை அப்பாவி மக்கள் 1000க்கும் அதிகமாகக் கொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி,
தென் சூடான் ஆயர்கள் ஏனைய மதத் தலைவர்களுடன் இணைந்து அறிக்கையொன்றை Sudan Tribune என்ற
பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். தற்போது தென் சூடான் அரசுத் தலைவராக இருக்கும் Salva
Kiir Mayardit அவரின் குழுவுக்கும், முன்னாள் உதவித் தலைவர் Riek Macharக்கு நம்பிக்கையாக
இருக்கும் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்களால், இதுவரை 2 இலட்சத்திற்கும்
அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்து பக்கத்து நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று
Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. மக்களின் நலனை முதன்மைப் படுத்தி நாட்டில்
முதலில் அமைதியை உறுதிப்படுத்தவும், அதன் பின் அரசியல் கருத்து வேறுபாடுகளை பேச்சு வார்த்தைகள்
வழியாகத் தீர்க்கவும் இரு தரப்பினரும் முன்வர வேண்டுமென மதத் தலைவர்கள் தங்கள் அறிக்கையில்
விண்ணப்பித்துள்ளனர்.