திருத்தந்தை பிரான்சிஸ் : திருமுழுக்கு அருளைப் புதுப்பிப்பதற்கு கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு
சன.08,2014. இப்புதனன்று, குளிரோடு, கதிரவன் ஒளியும் சேர்ந்து காலநிலை இதமாக இருக்க,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த 2014ம் புதிய ஆண்டில் நிகழ்த்தும் முதல் புதன்
மறைபோதகத்தைக் கேட்பதற்கு கோல்டன் சர்க்கஸ் நிறுவனத்தின் 120 பேர் உட்பட ஏறக்குறைய பத்தாயிரம்
பேர் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்தனர். அன்புச் சகோதர சகோதரிகளே,
அருளடையாளங்கள் பற்றிய மறைக்கல்வித் தொடரை இன்றைய மறைபோதகத்திலிருந்து தொடங்குவோம், முதலில்
திருமுழுக்கு அருளடையாளம் பற்றிப் பார்ப்போம்; வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் நம்
ஆண்டவரின் திருமுழுக்கு விழாவோடு இத்தொடர் ஒரு மகிழ்வான பொருத்தமாக இருக்கின்றது என இப்புதன்
பொது மறைபோதகத்தை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருஅவையே ஓர் அருளடையாளம்
என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நமக்குச் சொல்கிறது. இது திருவருள் நிறைந்த
ஓர் அடையாளம், வரலாற்றில் கிறிஸ்துவின் மீட்பளிக்கும்பணி தூய ஆவியின் வல்லமையால் இவ்வுலகில்
செயல்பட வைக்கின்றது. திருஅவையின் ஏழு அருளடையாளங்களில் முதலாவதான திருமுழுக்கு, கிறிஸ்துவில்
புதிய பிறப்பை நமக்கு அளிக்கின்றது; அவரின் மரணம் மற்றும் உயிர்ப்பின் பேருண்மையில் நம்மைப்
பங்குதாரர்களாக்குகின்றது; பாவத்தின் மன்னிப்பை நமக்கு வழங்கி, கடவுளின் குழந்தைகள் மற்றும்
அவரின் திருஅவையின் உறுப்பினர்கள் என்ற புதிய சுதந்திரத்தை நமக்குக் கொணர்கிறது. எனவே
நாம் பெற்றுள்ள மாபெரும் கொடையை நாம் மறக்காதிருப்போம். நமது திருமுழுக்கு நம்மை மாற்றியுள்ளது;
புதிய மற்றும் மகிமையான நம்பிக்கையை நமக்குக் கொடுத்துள்ளது; அனைவருக்கும், குறிப்பாக,
கிறிஸ்துவின் திருமுகத்தை நாம் பார்க்கும் ஏழைகளுக்கு, கடவுளின் மீட்பளிக்கும் அன்பைக்
கொண்டுசெல்வதற்கு நமக்கு உரிமை கொடுக்கின்றது. அதோடு, நமது திருமுழுக்கு, திருஅவையின்
புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் நமக்கு ஒரு பங்கையும் அளித்துள்ளது. சீடர்கள் என்ற
வகையில் நாமும் மறைபோதகர்களே. வருகிற ஞாயிறன்று நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக்
கொண்டாடும் நாம், நமது திருமுழுக்குத் திருவருளை நம்மில் புதுப்பிப்பதற்கு நம் ஆண்டவரிடம்
வரம் கேட்போம்; நம் அனைத்துச் சகோதர சகோதரிகளோடு, நாம் உண்மையான கடவுளின் பிள்ளைகளாகவும்,
அவரின் திருஉடலாம் திருஅவையின் உயிருள்ள உறுப்பினர்களாகவும் நம்மை மாற்றுமாறும் அவரிடம்
அருள் வேண்டுவோம். இவ்வாறு, இவ்வாண்டின் தனது முதல் புதன் பொது மறைபோதகத்தை நிறைவுசெய்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எல்லாப் பயணிகளையும் வாழ்த்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையம்
அளித்தார்.