2014-01-04 15:30:49

திருத்தந்தை பிரான்சிஸ்:இளையோரே, உங்களின் நண்பராக இருக்க இயேசு விரும்புகிறார்


சன.04,2014. அன்பு இளையோரே, உங்களின் நண்பராக இருக்க இயேசு விரும்புகிறார், இந்த நட்பின் மகிழ்வை எல்லா இடங்களிலும் நீங்கள் பரப்ப வேண்டுமெனவும் அவர் விரும்புகிறார் என்று, தனது டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பெயினில் அருள்சகோதரிகள் இல்லமொன்றுக்குத் தொலைபேசியில் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
புத்தாண்டுக்கு முந்திய தினம் தென் இஸ்பெயினின் அருள்சகோதரிகள் இல்லமொன்றுக்குத் தொலைபேசி எடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சகோதரிகள் அந்நேரத்தில் தொலைபேசியை எடுக்காததால் தனது குரலைப் பதிவு செய்து, பின்னர் அவர்களை அழைத்துப் பேசியிருக்கிறார்.
செபம் முடிந்து வந்தவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொலைபேசிப் பதிவுச் செய்தியைக் கேட்ட அச்சகோதரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர், பின்னர் மீண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
அக்கன்னியர் இல்லத்திலுள்ள அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த சில சகோதரிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால் புத்தாண்டுக்கு முந்திய தினம் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பி தொலைபேசியை எடுத்திருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.