காயங்கள் பரிவுடன் கவனிக்க முடியாமல் போகும்போது அதிக வலிதரும், திருத்தந்தை பிரான்சிஸ்
சன.04,2014. காயங்கள் வலி தரும், குறிப்பாக, அந்தக் காயங்கள் பரிவுடன் கவனிக்க முடியாமல்
போகும்போது இன்னும் அதிக வலிதரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். அர்ஜென்டீனா
நாட்டின் புவனோஸ் ஐரெஸ் நகரில் அமைந்திருந்த ‘Crom’ இரவு விடுதியொன்றில் 2004ம் ஆண்டு
டிசம்பர் 30ம் தேதியன்று ஏற்பட்ட தீ விபத்தில் 194 பேர் இறந்தனர். இந்தத் துன்பகரமான
விபத்தின் 9ம் ஆண்டு நிறைவு அந்நகர் பேராலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டபோது, இவ்விபத்து
குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய மடல் ஒன்று அங்கு வாசிக்கப்பட்டது. காயங்களைக்
குணமாக்கப் பரிவு தேவை என்பதை தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்,
குழந்தை இயேசுவின் மென்மையான மனதில் இப்பரிவினை நாம் உணர முடியும் என்று கூறியுள்ளார். ஒன்பது
ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களைத் தான் சிறப்பாக
நினைவுகூர்ந்து செபிப்பதாக, அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.