திருத்தந்தையின் அமைதி தினச்செய்தி இந்தியாவின் வளர்ச்சிக்கு கிரியா ஊக்கி, கர்தினால்
கிரேசியஸ்
சன.03,2014. அமைதிக்கு அடித்தளமும் வழியுமாக அமைவது சகோதரத்துவம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் அமைதி தினச்செய்தி இன்றைய இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது என்று
இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கூறினார். சனவரி முதல்
தேதியன்று கத்தோலிக்க உலகில் சிறப்பிக்கப்பட்ட அமைதி தினத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் வெளியிட்ட செய்தி குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த கர்தினால்
கிரேசியஸ், உறுதியான அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு சகோதரத்துவம் மிகவும்
தேவைப்படுகின்றது என்று கூறினார். பாகுபாடு, சமூக சமத்துவமின்மை ஆகிய தீமைகளிலிருந்து
இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு சகோதரத்துவத்தால் மட்டுமே இயலும் என்றும் கூறினார் கர்தினால்
கிரேசியஸ். ஏழைகளுக்கும் செல்வந்தருக்குமிடையே, கிராமத்தினருக்கும் நகரத்தவருக்குமிடையே
இடைவெளி அதிகரித்துவரும் இந்தியாவின் நிலைமை குறித்துப் பேசிய கர்தினால் கிரேசியஸ், 1997ம்
ஆண்டிலிருந்து, 2,50,000த்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளது நாட்டுக்குப்
பெருத்த அவமானமாக உள்ளது என்றும் கவலை தெரிவித்தார். ஆதாரம் : AsiaNews