திருத்தந்தை பிரான்சிஸ் : வலுவற்ற ஒரு குழந்தையின் வழியாக இறைவன் தன்னை
வெளிப்படுத்துகிறார்
சன.02,2014. 2013ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வந்த Twitter செய்திகளின்
ஒரு தொடர்ச்சியாக, சனவரி 2, இவ்வியாழனன்று - வலிமை, சக்தி ஆகியவற்றில் இறைவன் தன்னையே
வெளிப்படுத்துவதில்லை; மாறாக, சக்தியற்ற, வலுவற்ற ஒரு குழந்தையின் வழியாக இறைவன் தன்னை
வெளிப்படுத்துகிறார் – என்ற செய்தியை இவ்வாண்டின் முதல் Twitter செய்தியாக வெளியிட்டுள்ளார்.
மேலும், புத்தாண்டு நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இத்தாலிய அரசுத் தலைவர்
நப்போலித்தானோ அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்
என்று இத்தாலிய அரசுத்தலைவர் அலுவலகம் அறிவித்துள்ளது. சனவரி 1, இப்புதனன்று திருத்தந்தை
வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த
வாழ்த்துப் பகிர்வைக் குறிப்பிட்டு, இத்தாலிய அரசுத் தலைவருக்கு தன் புத்தாண்டு வாழ்த்துக்களை
மக்கள் முன் அறிவித்தார்.