இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்குக் கிறிஸ்மஸ்
டிச.28,2013. கொண்டாட்டம் மற்றும் பகிர்வின் காலமாக இருக்கும் கிறிஸ்மஸ் காலத்தில், பிரிவினைகளையும்
தடுப்புச்சுவர்களையும் கடந்து எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்வதென்று சிறாருக்கும் வயதுவந்தோருக்கும்
கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று இலங்கையின் சமூக மற்றும் சமய நிறுவன இயக்குனர் அருள்பணி
அசோக் ஸ்டீபன் கூறினார். நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மத்தியில்
கிறிஸ்மஸ் விழாவைச் சிறப்பித்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் விளக்கிய அருள்பணி
ஸ்டீபன், இவ்விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தவர்களில் பலர், சிறார் எனவும், இச்சிறாரில்
ஏறக்குறைய எல்லாருமே இந்துக்கள் எனவும் கூறினார். இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட
சிறாரில் பலருக்குத் தந்தையில்லை மற்றும் அவர்களின் தாய்மார் தங்களின் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக
எந்த வேலையையும் செய்யத் தயாராய் இருப்பவர்கள் என்றும் கூறிய அருள்பணி ஸ்டீபன், இனம்,
சாதி, மதம் என்ற பாகுபாடு பாராமல் அனைத்துக் குடிமக்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியது
அவசியம் என்றும் கூறினார். இலங்கையின் உள்நாட்டுப் போரின் பாதிப்பு இச்சிறாரில் இன்றும்
தெரிவதாக அக்குரு மேலும் தெரிவித்தார்.