ஆயர் Audo : சிரியாவில் குண்டு சப்தங்களுக்கு மத்தியில் கிறிஸ்மஸ்
டிச.21,2013. சிரியாவில் குண்டு சப்தங்களுக்கு மத்தியில் கிறிஸ்மஸ் கொண்டாடும் நிலை உள்ளது
என, அந்நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறையின் ஆயர் Antoine Audo கூறினார். புரட்சிப்
படைகளின் அதிகாரத்தின்கீழ் இருக்கும் அலெப்போ நகரின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில
நாள்களாக அரசுப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன என்று பீதெஸ் செய்தி நிறுவனத்துக்குச்
செய்தி அனுப்பியுள்ள ஆயர் Audo, அந்நாட்டின் பிற இடங்களிலும் குண்டு சப்தங்களைக் கேட்க
முடிகின்றது எனத் தெரிவித்தார். காரித்தாஸ் நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன
எனவும், விவிலிய வகுப்புகள் உட்பட கிறிஸ்மஸ் பெருவிழாவுக்குத் தாங்கள் விசுவாசிகளைத்
தயாரித்து வருவதாகவும் கூறினார் இயேசு சபை ஆயர் Audo. இதற்கிடையே, வருகிற சனவரியில்
ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் சிரியா குறித்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பல முக்கிய
நாடுகளின் ஏறக்குறைய 30 அமைச்சர்கள் பற்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.