டிச.20,2013. உலக அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள், திறமையான நிர்வாகம் ஆகியவற்றுக்கு
உலகத் தலைவர்கள் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன். இவ்வெள்ளியன்று
கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள
பான் கி மூன், மில்லென்ய வளர்ச்சித் திட்ட இலக்குகள் 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படுவதற்கு
உலகத் தலைவர்கள் உறுதி கொடுத்திருப்பதை நினைவுபடுத்தியுள்ளார். மில்லென்ய வளர்ச்சித்
திட்ட இலக்குகள் எட்டப்படுவதற்கு இடைவெளிகளை அகற்றுவோம் என்ற தலைப்பில் 2013ம் ஆண்டின்
அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்
20ம் தேதி அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை
2005ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நிறைவேற்றியது ஐ.நா. பொது அவை.