சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இயங்கும் குளிர்சாதனைப் பெட்டி - திண்டுக்கல்
மாணவ, மாணவிகள் கண்டுபிடிப்பு
டிச.18,2013. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், குறைவான மின்சக்தி கொண்டு இயங்கும்
வகையில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதனைப் பெட்டியை தமிழ்நாட்டில் திண்டுக்கல் பகுதியைச்
சேர்ந்த மாணவ, மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். திண்டுக்கல்லுக்கு அருகே உள்ள சின்னாளபட்டியில்
சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அமலோற்பவ செரின், பிரசாத், உமர் பாருக்,
சான்டோ ஆனந்த், ஜெயரோசினி ஆகிய மாணவ, மாணவிகள் வேதியல் பொருள்களின் பயன்பாடு அற்ற குளிர்சாதனப்
பெட்டியை கண்டுபிடித்துள்ளனர். டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் திருப்பூர் பொறியியல்
கல்லூரி ஒன்றில் நடைபெற்ற 21-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆற்றல் என்ற பிரிவில்,
பாதுகாப்போம், பயன்படுத்துவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவியர் தங்களுடைய கண்டுபிடிப்பின்
ஆய்வினைச் சமர்ப்பித்தனர். இவற்றில் 30 சிறந்த ஆய்வறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதில் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த குளிர்சாதனப்
பெட்டியை வடிவமைத்து சமர்ப்பித்த ஆய்வறிக்கையை அறிவியல் அறிஞர்கள் சிறந்த ஆய்வறிக்கையாக
தேர்ந்தெடுத்தனர். இவர்களது கண்டுபிடிப்பைக் கொண்டு குளிர்சாதனப் பெட்டியைத் தயாரித்தால்
வருடத்திற்கு 100 முதல் 150 யூனிட் மின்சக்தியே செலவாகும். இந்தக் குளிர்சாதன பெட்டியில்
அமோனியா போன்ற குளிர்விப்பான்கள் பயன்படுத்தாததால் ஓசோன் படலத்தை பாதிக்கும் குளோரோ புளோரா
கார்பன் வெளியிடுவதில்லை. சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடிய குளிர்சாதனப் பெட்டியைக்
கண்டுபிடித்த சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகைள தமிழக ஆளுனர்
ரோசையா பாராட்டி பரிசளித்தார்.