2013-12-18 15:57:49

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், மாஸ்கோவில் பயணம்


டிச.18,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையுடன் மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பு இதுவரை வரலாற்றில் நிகழாத ஒரு முயற்சி என்பதால், அதற்குத் தகுந்த தயாரிப்புக்கள் தேவைப்படுகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Kurt Koch அவர்கள், டிசம்பர் 14, கடந்த சனிக்கிழமை முதல், டிசம்பர் 19, இவ்வியாழன் முடிய மாஸ்கோவில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, இப்புதனன்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Kirill அவர்களைச் சந்தித்தார்.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Kirill அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுக்கு வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறிய கர்தினால் Koch அவர்கள், இச்சந்திப்பு எப்போது நிகழும் என்பதை குறிப்பிட்டுப் பேசவில்லை.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் பல்வேறு வழிகளில் ஒருங்கிணைந்து செயலாற்றும் வழிகள் இச்சந்திப்பில் பேசப்பட்டன என்றும், குறிப்பாக, சிரியாவில் அமைதி நிலவ தேவையான முயற்சிகள் விவாதிக்கப்பட்டன என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.