2013-12-18 15:43:40

அன்னைமரியாத் திருத்தலங்கள் – மரியின் கிராமம் திருத்தலம், நைரோபி


டிச.18,2013. 1980ம் ஆண்டு மே மாதத்திலும், 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநற்கருணை மாநாட்டுக்காகவும் ஆப்ரிக்காவின் கென்ய நாட்டுக்கு முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் திருப்பயணம் மேற்கொண்ட பின்னர் அந்நாட்டில் இறைவனின் தாய் மரியாவுக்கென ஒரு தேசியத் திருத்தலம் தேவை என்பதை கென்ய ஆயர்கள் உணர்ந்து ஒரு தேசிய அன்னைமரியாத் திருத்தலம் அமைப்பதற்கும் தீர்மானித்தனர். Nakuru மறைமாவட்டம், கென்யாவின் மத்திய பகுதியில் இருப்பதாலும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதற்கு வசதியான பகுதியாக அது இருப்பதாலும் அம்மறைமாவட்டத்தில் தேசிய அன்னைமரியாத் திருத்தலத்தை எழுப்புமாறு 1984 மற்றும் 1985ம் ஆண்டுகளில் கென்ய ஆயர் பேரவை அம்மறைமாவட்டத்தைக் கேட்டுக்கொண்டது. அதேசமயம் 1980களின் தொடக்க காலங்களில் கென்யாவின் பல பகுதிகளில் மக்கள் அன்னைமரியாவைக் காட்சியில் கண்டதாக அறிவித்து வந்தனர். Nakuru மறைமாவட்டத்தின் Subukiaவிலுள்ள Magomano பள்ளி வளாகத்தில் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியிலிருந்து செப்டம்பர் 28ம் தேதி வரை அன்னைமரியாவை மக்கள் காட்சியில் கண்டதாக நற்செய்தியாளர் புனித யோவான் பங்குத்தந்தை அருள்பணி John Jones அறிவித்தார். இக்காட்சிகள் உண்மையா என்பது தெரியவில்லை எனினும், இப்பங்கிலும், நாட்டின் சில இடங்களிலும் அன்னைமரியா பக்தி தீவிரமடைந்தது. குறிப்பாக செபமாலை பக்தி முயற்சி பிரபலமடைந்தது.
பாட்ரிக் மறைபோதகச் சபையைச் சார்ந்த அருள்பணி John Jonesம் தனது பங்கிலிருந்த சிறிய கிறிஸ்தவச் சமூகங்களைச் சந்தித்து அன்னைமரியா பற்றிய கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளை விளக்கினார். விவிலியத்திலிருந்து மேற்கோள்களையும்
சுட்டிக்காட்டினார். 1985ம் ஆண்டின் துவக்கத்தில் அப்பங்கில் அன்னைமரியாவுக்கென ஒரு சிறிய திருத்தலம் கட்டத் தீர்மானித்தார். அப்பங்கைச் சேர்ந்த Munanda என்ற ஊரில் திருத்தலம் கட்டி, அயர்லாந்திலிருந்து கொண்டு வந்திருந்த சிறிய அன்னைமரியா திருவுருவத்தையும் அங்கு அவர் வைத்தார். இதன்மூலம் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்னைமரியா ஆண்டையும் Nakuru மறைமாவட்ட ஆயரின் ஆசீரோடு சிறப்பாகத் தொடங்கினர் அப்பங்கு மக்கள். 1988ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்னைமரியா ஆண்டையும் சிறப்பாக நிறைவு செய்தனர் அப்பங்கு மக்கள். இவ்வழிபாடுகளில் எல்லா இடங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மக்களின் இப்பக்தியைக் கண்ட Nakuru ஆயர் Ndingi Mwana' Nzekiம் கர்தினால் Maurice Michael Otunga அவர்களும் சேர்ந்து கென்ய நாட்டுக்கு ஒரு தேசிய அன்னைமரியாத் திருத்தலத்தை எழுப்புவதற்குத் தகுந்த இடம்தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர். அச்சமயத்தில், புதிதாகக் கட்டப்படவிருக்கும் இந்தத் திருத்தலம் "இறைவனின் அன்னை, மரியின் கிராமம்" என அழைக்கப்பட வேண்டும் எனவும் கர்தினால் Otunga அறிவித்தார். இதன்மூலம் Subukiaவில் அமைக்கப்படவிருந்த தேசியத் திருத்தலத்துக்கு "இறைவனின் அன்னை, மரியின் கிராமம்"என்ற பெயர் அதிகாரப்பூர்வமானது. இறைவனின் அன்னை விழாவான சனவரி முதல் தேதியன்று இங்கு விழாவைச் சிறப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
உண்மையில், Subukia புவியியல் அமைப்பின்படியும் முக்கியவத்தும் வாய்ந்தது. கென்யாவின் பல்வேறு பூர்வீக இன மக்களை ஒன்று சேர்ப்பதற்கும் இவ்விடம் வசதியாக இருந்தது. ஏனெனில் ஏற்கனவே Subukia பள்ளத்தாக்கில் இந்தப் பூர்வீக இனங்களில் பலர் வாழ்ந்து வந்தனர். மேலும், பூமத்தியரேகை Subukia வழியாகச் செல்வதால் உலகின் இரண்டு அரைக்கோளங்களை இணைக்கும் இடமாகவும் இவ்விடம் உள்ளது. 1989ம் ஆண்டு மே மாதத்தில் திருத்தலம் கட்டுவதற்கு இடம் தேடுவதற்குச் சிறப்பு குழு உருவாக்கப்ட்டது. இதன் உறுப்பினர்கள், அன்னைமரியாவை மக்கள் காட்சியில் கண்ட Munadana வளாகம் 12 ஏக்கர் இடமாக இருந்ததால் பெரிய இடம் தேடினர். இக்குழு இதற்கு முயற்சிகள் எடுத்த 48 மணி நேரத்துக்குள்ளாக, எதிர்பாராதவிதமாக, ஒருவர் 50 ஏக்கரை இலவசமாகக் கொடுப்பதற்கு முன்வந்தார். திருத்தலத்தை விரிவுபடுத்துவதற்கு மேலும் 200 ஏக்கர் தேவைப்பட்டது. தளபதி Ikou Muteithia என்பவர் மலிவான விலையில் இந்த இடத்தை விற்பதற்கு முன்வந்தார். பின்னர் புதிய திருத்தலத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.
1991ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி அமல மரி விழாவன்று அந்தப் பசிலிக்கா அமைந்துள்ள குன்றில் அடர்ந்த புதர்ச்செடிகளை பணியாள்களின் தலைவர் Henry Muthuku அகற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சிறிய நீர் ஊற்று வெளிப்பட்டது. அங்கு தோண்டியபோது தண்ணீர் தொடர்ந்து ஊற்றெடுத்து ஓடியது. அது இந்நாள்வரை வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதை அன்னையின் அற்புதம் என்றே மக்கள் நம்புகின்றனர். அங்கு தொடர்ந்து பல புதுமைகள் இடம்பெற்று வருகின்றன. பல நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். நைரோபியின் Subukia இறைவனின் அன்னை, மரியின் கிராமம் திருத்தலம், கென்ய மக்களை ஒன்றிணைக்கும் புனித இடமாக விளங்கி வருகிறது. கத்தோலிக்கர் மட்டுமல்ல, பிற மதத்தவரும் அங்குச் சென்று தங்களின் விசுவாசத்தை ஆழப்படுத்தி வருகின்றனர். 200 கிலோ மீட்டர் பக்தர்கள் கால்நடையாகச் சென்று அன்னையின் அருள்பெற்றுச் செல்கின்றனர். தங்களின் மெக்காவாக இதனை மக்கள் கருதுகின்றனர். தற்போது அத்திருத்தலத்தின்மீது பெரிய திருச்சிலுவை வைக்கப்பட்டுள்ளது. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இத்திருத்தலத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.