மார்த்தா இல்லப் பணியாளர்கள், தெருவில் வாழும் மூன்று ஏழைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்
பிறந்த நாள்
டிச.17,2013. கடவுள் ஒருபோதும் நம்மைத் தனியே விடுவதில்லை, அவர் எப்போதும் நம்முடனே நடக்கிறார்,
நம்மோடு பயணிக்கிறார் என்று, இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறந்த நாளான இச்செவ்வாயன்று,
அவர் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் கர்தினால்கள் அவைத் தலைவர்
கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, திருப்பீடச் செயலர், அவ்வில்லத்தில் வாழ்வோர் மற்றும் வீடற்று
தெருவில் வாழும் மூன்று ஏழைகளுடன் சேர்ந்து திருப்பலி நிகழ்த்தியபோது, கடவுள் நமது வாழ்வில்
எப்போதும் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை வலியுறுத்திக் கூறினார். இயேசுவின் தலைமுறை
பட்டியல் பற்றிச் சொல்லும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய
திருத்தந்தை பிரான்சிஸ், இந்த நற்செய்திப் பகுதி, தொலைபேசி எண்கள் பதிந்த நூல்போல இருக்கின்றது
என, ஒருசமயம் ஒருவர் சொன்னதைக் கேட்டிருக்கிறேன், ஆனால் இந்நற்செய்திப் பகுதி தூய்மையான
வரலாறு, இது முக்கியமான தலைப்பைக் கொண்டுள்ளது எனக் கூறினார். முதல் பெற்றோர் பாவம்
செய்தபின்னர் கடவுள் நம்முடனே பயணம் செய்வதற்குத் திருவுளம் கொண்டார் என்றும் கூறிய திருத்தந்தை,
கடவுள் ஆபிரகாமைக் கூப்பிட்டு தம்மோடு நடக்க அழைத்தார், இவ்வாறு கடவுளின் பயணம் வரலாறு
முழுவதும் தொடருகிறது, அவர் நம்மோடு வரலாற்றை அமைக்க விரும்பினார், இந்த வரலாற்றில் புனிதர்களும்
பாவிகளும் உள்ளனர் என்றுரைத்தார். தாம் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின்
கடவுள் என்று சொன்னதன்மூலம், கடவுள் நம் ஒவ்வொருவரின் பெயரையும் தமது குடும்பப் பெயராக
எடுத்துக்கொண்டார், நமது பெயரை தமது குடும்பப் பெயராக எடுத்துக்கொண்டதன்மூலம் அவர் நம்மோடு
வரலாற்றை அமைத்தார், நாம் வரலாற்றை எழுதவும் அனுமதித்தார் எனவும் கூறினார் திருத்தந்தை. இச்செவ்வாயன்று
தனது 77வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இத்திருப்பலியின்
இறுதியில் திருப்பீடச் செயலர் பேராயர் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனைவர் பெயராலும் நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்தார். பின்னர் அனைவருடன் சேர்ந்து காலை சிற்றுண்டி அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கடவுளின் அன்பு ஓர் இனத்துக்குரியது அல்ல, அவர் ஒவ்வொரு மனிதரையும் அன்புடன்
நோக்கி, பெயர் சொல்லி அழைக்கிறார் என, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் செய்தியில் ஒன்பது
மொழிகளில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.