மனித வியாபாரத்தில் பாதிக்கப்படுபவரை நினைவுகூருகிறது அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை
டிச.17,2013. மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மற்றும்
அதற்குப் பலியானவர்களை நினைவுகூரும் ஆண்டு தினமாக பிப்ரவரி 8ம் தேதியைக் குறித்துள்ளது
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை. சிறுமியாக இருக்கும்போதே கடத்தப்பட்டு சூடானிலும்,
பின்னர் இத்தாலியிலும் அடிமையாக விற்கப்பட்ட சூடான் நாட்டுப் பெண் புனித ஜோஸ்பின் பக்கித்தாவின்
விழாவான பிப்ரவரி 8ம் தேதியை இந்த தேசிய ஆண்டு தினமாக அறிவித்துள்ளது அமெரிக்க ஆயர் பேரவை. மனித
வியாபாரத்திற்குப் பலியாவோர் மற்றும் அதில் பாதிக்கப்படுவோரை ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி
8ம் தேதியன்று நினைவுகூர்ந்து அன்றைய நாளில் செபம் மற்றும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்குமாறு
கேட்டுள்ளனர் அமெரிக்க ஆயர்கள். வருகிற சனவரி 5 முதல் 11 வரை தேசிய குடியேற்றதாரர்
வாரம் கடைப்பிடிக்கப்படும் நாள்களில் மனித வியாபாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்
நடவடிக்கைகளிலும் அமெரிக்க ஆயர்கள் ஈடுபடவுள்ளனர்.