2013-12-17 15:56:46

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறந்த நாளுக்கு, இந்தியத் திருஅவை நல்வாழ்த்துக்கள்


டிச.17,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இந்தியத் திருஅவையின் செபமும் அன்பும் கலந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை இச்செவ்வாயன்று தெரிவித்துள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
தனது 77வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இந்தியத் திருஅவையும், அதன் ஒரு கோடியே 80 இலட்சம் கத்தோலிக்கரும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையைத் தொடர்ந்து நடத்தவும், அனைவருக்கும் உள்தூண்டுதலாக இருக்கவும் இறைவன் அவருக்கு மெய்ஞானத்தையும், அருளையும் பொழியவேண்டுமென்று செபிப்பதாகவும் கூறியுள்ளார் மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ்.
மும்பையில் அன்னை தெரேசா சபையினர் நடத்தும் கருணை இல்லத்தில் இச்செவ்வாய் மாலையில் திருப்பலி நிகழ்த்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபித்தார் கர்தினால் கிரேசியஸ்.
விண்ணகத்திலுள்ள முத்திப்பேறுபெற்ற அன்னை தெரேசாவும் இந்தியத் திருஅவையுடன் சேர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைச் சொல்வதில் மகிழ்வார் என்று தான் நம்புவதாகவும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.